தமிழகத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு.. ஆனால் பழைய படங்களே ரிலீஸ்
சென்னை: தமிழகத்தில் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு பிறகு நாளை திரையரங்குகள் திறக்கப்படுகிறது. ஆனால் பழைய படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.
கொரோனா ஊடரங்கு காரணமாக மார்ச் மாதத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் வரும் நவம்பர் 10ம் தேதி முதல் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதன்படி திரையரங்குகளை திறக்க தமிழகம் முழுவதும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
நாளை முதல் தமிழகத்தில் 1050 தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளதாக தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
எனினும் தியேட்டர்களில் இந்த தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸ் ஆவது சந்தேகம் என்றே தெரிகிறது. ஏனெனில் தியேட்டர்களில் படங்களை ஒளிபரப்புவதற்கான விபிஎப் கட்டணத்தை திரைப்பட தயாரிப்பாளர்கள் செலுத்த மாட்டார்கள் என்றும், அதை இனி திரையங்கு உரிமையாளர்களே செலுத்த வேண்டும் என்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க திரையங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் மறுத்துவிட்டனர்.
இதனால் நாளை தீபாளியை முன்னிட்டு புதிய படங்களை எதுவும் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு வரலாற்றில் முதல் முறையாக புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலை உருவாகி உள்ளது. பழைய படங்களை நாளை திரையிடப்படும் என்றும் அதற்கு டிக்கெட் புக்கிங் நடைபெறுகிறது என்றும் திரையங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.