பள்ளிக்கரணையை பயமுறுத்திய 'சுக்கு காபி' கும்பல்.. பொறி வைத்து பிடித்தது போலீஸ்
Recommended Video
சென்னை: பள்ளிக்கரணை பகுதியையே பயமுறுத்தி வந்த, பிரபல கொள்ளை கும்பலை காவல்துறையினர் கைது செய்து மக்களுக்கு நிம்மதி பெருமூச்சை வரச் செய்துள்ளனர்.
சென்னை பள்ளிகரணை பரமேஷ்வரன் தெருவை சேர்ந்த முனி உசைன் என்பவர் வீட்டு கதவை, கடந்த செப்டம்பர் 24ம் தேதியன்று உடைத்து 40 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இதேபோல் பள்ளிகரணை அம்பாள் நகர் பகுதியில் அம்சவள்ளி என்பவர் நடந்து செல்லும்போது 1.5 சவரன் தங்க நகையை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பறித்து சென்றனர்.
இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய, சஜித் உட்பட 35 பேர் வேட்பாளர்கள்- இறுதிப் பட்டியல் வெளியீடு
சம்பவம்
பள்ளிகரணை அடுத்த ஒட்டியம்பாக்கம் அரசன்கழனியில் பபிதா என்பவர் வீட்டு கதவை உடைத்து 4 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துள்ளனர்.
சென்னை பள்ளிகரணை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களும், செயின் பறிப்புகளும், இருசக்கர வாகனங்களை திருடுவதும் அதிகரித்துள்ளது.
சிசிடிவி கேமரா
பள்ளிகரணை காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வந்த நிலையில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் பள்ளிகரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம்வின்சன்ட் தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் செல்போன் டவர் வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
சுக்கு காபி
இப்படியாக விசாரணை நடத்தி, சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகர் 8 அடுக்கு ஏ பிளாக் பகுதியில் பதுங்கியிருந்த சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(எ) சுக்குகாபி (21), பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியை சேர்ந்த சூர்யாவிக்ரம்(எ)மெக்கானிக் சூர்யா(17), சீனிவாசன்(24) ஆகியோரை கைது செய்தனர். அப்பொழுது மகபூல் பாட்ஷா(எ) பல்லு(22) அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வீடு புகுதல், சங்கிலி பறித்தல்
கைது செய்த மூவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, கடந்த 8ம் மாதம் பள்ளிகரணையில் முனி உசைன் வீடு உள்ளிட்ட பல்வேறு வீடுகளை உடைத்தும், நடந்து செல்பவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் ஒப்புக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. கைது செய்தவர்களிடமிருந்து 40 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி, லேப்டாப், ப்ளே ஸ்டேஷன் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாராட்டுக்கள்
பின்னர் மூவர் மீது வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம் வின்சன்ட், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சாதூரியமாக கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதை பறிமுதல் செய்த குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம் வின்சன்ட், உதவி ஆய்வார்கள் இளங்கனி, கண்ணன் உள்ளிட்டவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.