கடைக்குள் 2 பேர் வரும்போதே கடைக்காரர் சுதாரித்திருக்க வேண்டாமா.. வியாசர்பாடியில் ஒரு சோகம்!
வியாசர்பாடியில் நகை திருட்டு தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
சென்னை: கேமரா, மீடியா இதெல்லாம் இருப்பது தெரிந்தும் நகைகடைகளில் திருட்டு என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதில், கர்சீப் கட்டிக் கொண்டு கடைக்குள் 2 பேர் வரும்போதே கடைக்காரர் சுதாரித்திருக்க வேண்டாமா.. கடைசியில் சரமாரி தாக்குதல் நடத்தி, தங்க நகையும் பறிபோன சம்பவம் சென்னையில் மீண்டும் நடந்துள்ளது.
Recommended Video
வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ஒரு நகைக்கடை உள்ளது. பெயர் விநாயகா.. இந்த கடைக்கு நேற்று முன்தினம் 2 இளைஞர்கள் வந்தனர்.
ஒருவர் தொப்பி அணிந்திருந்தார். இன்னொருத்தர் முகத்தை கர்சீப்பால் கட்டி இருந்தார். அதனால் பாதி முகம்தான் அவருக்கு தெரிந்தது.
இளைஞர்கள்
உள்ளே நுழைந்ததும், மோதிரம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதன்படியே பெட்டிகளில் உள்ள மோதிரங்களை எடுத்து கடை ஊழியர் சுதர்சனம் காட்டினார். அந்த மோதிரங்களை ஆளுக்கொருவர் எடுத்து கையில் மாட்டிக் கொண்டு சரியாக இருக்கிறதா, அழகாக இருக்கிறதா என்று பார்த்தபடியே இருந்தனர். ஆனால் மோதிரங்களை கழட்டவேயில்லை.
டிசைன்கள்
இதைதவிர, வேற மோதிரங்களை உள்ளே இருந்து எடுத்து காட்டுமாறு இரு இளைஞர்களும் சுதர்சனத்திடம் சொன்னார்கள். ஆனால் சுதர்சனமோ, முதலில் கையில் மாட்டி உள்ள மோதிரங்களை எல்லாம் கழட்டுங்கள், வேறு டிசைன் காட்டுகிறேன் என்று சொன்னார்.
தாக்குதல்
ஆனால் இதை காதில் வாங்காமலேயே ஒரு இளைஞர் வெளியே கிளம்பி சென்றார். மற்றொருவரோ, கையில் மோதிரத்துடன் போகாமல், சுதர்சன் கையில் இருந்த மோதிரங்களை வாங்க முயற்சித்தார். அப்போது சுதர்சன் இளைஞரின் கையை பிடித்து இழுக்கவும், அந்த இளைஞரோ சுதர்சனை சரமாரியாக தாக்கிவிட்டு, நகையையும் எடுத்து கொண்டு ஓடிவிட்டார்.
4 பவுன் நகைகள்
இந்த காட்சிகள் எல்லாமே கடையில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. 2 இளைஞர்கள் லவட்டி கொண்டு போனது எப்படியும் 4 பவுன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து சுதர்சனம் வியாசர்பாடி போலீசில் புகார் செய்ய, போலீசாரோ, சிசிடிவி காட்சி உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.