கொரோனா கண்காணிப்பு வளையத்தில் தமிழகம் முழுக்க 9424 பேர்.. நேற்று ஒரே நாளில் 400 பேர்
சென்னை: கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 400 பேர் கூடுதலாக தனிமைப்படுத்தப்பட்டனர். இதன்படி தமிழகத்தில் தற்போது 9424 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. ஸ்பெயினில் இருந்து கோவை திரும்பிய 32 வயது பெண்ணுக்கும், கலிபோர்னியாவில் இருந்து திரும்பிய 64 வயது மூதாட்டிக்கும், துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய 43 வயது ஆணுக்கும் நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் மட்டும் குணமாகிவிட்டார். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 2,05,396 பேர் ஆய்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் 9424 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 400 பேர் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.
தற்போது கொரோனா அறிகுறிகளுடன் 54 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 443 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 9பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு இல்லாதவர்கள் 352 பேர் ஆவர். 84 பேரின் ரத்த மாதிரிகள் இன்னும் ஆய்வில் உள்ளது.
தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 9424 ஆக அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் 1120 படுக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று படுக்கைகளின் எண்ணிக்கையை 2069 ஆக அதிகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.