வேலூர் தேர்தல்.. எடப்பாடியாருக்கு கிடைத்த செம சான்ஸ்.. வென்றால்.. ஒரே கல்லில் பல மாம்பழங்கள்!
Recommended Video
சென்னை: எடப்பாடியாருக்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. இதன்மூலம் தனது பலத்தை எப்படி நிலைநாட்ட போகிறார், எப்படி தனது செல்வாக்கை விஸ்தரிக்க போகிறார் என்பதில்தான் சாணக்கியத்தனமே அடங்கி உள்ளது.
பணப்பட்டுவாடா பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலை ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எப்படியும் திமுக தரப்பில் போட்டியிடும், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தத்தைத்தான், அதிமுக கூட்டணி சார்பாக களமிறக்கப்பட்ட புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் இந்த முறை எதிர்கொள்ள நேரிடும்.
கல்யாணத்துக்கு போய்விட்டு வீடு திரும்பிய தம்பதி.. வேகமாக மோதிய லாரி.. மனைவி பரிதாப மரணம்
சமூக வாக்குகள்
இந்த வாய்ப்பினை ஏசி சண்முகத்தை வைத்து அதிமுக பயன்படுத்தி கொள்ள முயலும் என பார்க்கப்படுகிறது. ஏனெனில் களமிறங்கும் ஏசி சண்முகம், சாதாரண வேட்பாளர் இல்லை. வேலூரில் கணிசமான முதலியார் சமூக வாக்குகளை மொத்தமாக அள்ளக்கூடியவர்.
வாக்கு சதவீதம்
போன முறை தேர்தலில் ஏசி சண்முகம் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தார். அதாவது அதிமுக முதலிடம் என்றால், ஏசி சண்முகம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். திமுகவோ 3-ம் இடத்தைதான் பிடித்தது. அதனால் இந்த முறை அதிமுக ஏசி சண்முகத்தை முன்னிறுத்தி வெற்றி வாய்ப்பை தக்க வைப்பது முதலாவது அவசியமாகிறது. அதுமட்டுமில்லை, பணத்துக்கு பஞ்சமே இல்லாமல், தொகுதிக்குள் "தாராளங்கள்" காட்டப்படும் அளவுக்கு பசை உள்ளவர் ஏசி சண்முகம் என்பதால் இதை பற்றியும் அதிமுக கவலைப்பட தேவையில்லை.
குலுங்கி அழுதார்
தேர்தல் ரத்து என்றதும், துரைமுருகன் தரப்பை விட அதிகமாக பாதிக்கப்பட்டது ஏசி சண்முகம்தான்! அதனால்தான், சட்டரீதியாகவே இதை அணுகியும், நிலைகுலைந்து போனார்... குலுங்கி குலுங்கி அழுதார். அப்போது அதிமுக தரப்பில் அவருக்கு யாருமே ஆறுதல்கூட சொல்லவில்லை என்ற ஒரு பேச்சு எழுந்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தத் தேர்தல் தெரிந்தோ தெரியாமலோ முதல்வர் எடப்பாடி தரப்புக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது.
உறுத்தல்
தற்போது, அதிமுகவில் ஓபிஎஸ்ஸின் கையே ஓங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் அதிமுக என்றால் அது ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் தான். இது எடப்பாடி தரப்புக்கு மிகவும் உறுத்தலாக உள்ள விஷயம். எனவே இதை உடைக்க கிடைத்த வாய்ப்புதான் வேலூர் தேர்தல். வேலூர் தேர்தலில் ஏசி சண்முகம் வெல்வதன் மூலம் அதை எடப்பாடி தரப்பு தனக்கு சாதகமாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தர்மசங்கடம்
ஏசி சண்முகம் ஒரு வேளை வென்றால், அது ஓபிஎஸ் தரப்பின் ஏகோபித்த நிலைக்கு முடிவு கட்ட உதவும். 2வது, ஏசிஎஸ்ஸுக்கு கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதிமுக ஒரு இணை அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுக்கவும் முயலலாம். இதன் மூலம் ரவீந்திரநாத் குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த முடியும்.
துருப்பு சீட்டு
ஏசிஎஸ் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகிறார் என்பதால் அவரும் அதிமுக உறுப்பினராகவே லோக்சபாவில் கருதப்படுவார். எனவே ஓபிஎஸ்ஸுக்கு இணையாக தனது தரப்பு துருப்புச் சீட்டாக ஏசிஸ்ஸை எடப்பாடி தரப்பு பயன்படுத்த முயலலாம்.
நம்பிக்கை நபர்
இது தன் ஆட்சியை பலப்படுத்தி கொள்வதுடன், மத்தியில் தனக்கு நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையையும் எடப்பாடிக்கு ஏற்படுத்தி தந்துவிடும். ஏசி சண்முகத்தை வெற்றி பெற வைத்து ஒரே கல்லில் நிறைய மாங்காய்களை அடிக்குமா எடப்பாடி தரப்பு ? பொறுத்திருந்து பார்ப்போம்!