மக்களே.. சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மைய கணிப்பு பலிக்கனும்னு வேண்டிக்குங்க!
சென்னை: சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான பெய்யவில்லை. இதனால் நீர் நிலைகள் வறண்டு போய் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
இதேபோல் சென்னையிலும் இந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும்படி மழை பெய்யவில்லை. இதனால் சென்னையில் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்டா நிலங்களை போலான ஏரிகள்
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஏரிகள் வறண்டு காவிரி டெல்டா நிலங்களைப் போல் வெடித்து கிடக்கிறது. கல்குவாரி நீர் மற்றும் வெளி மாவட்ட விவசாயிகளின் உதவியுடன் தமிழக அரசு சென்னை மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை ஓரளவுக்கு சரிகட்டி வருகிறது.
மழை பெய்தால் மட்டுமே
மழை பெய்தால் மட்டுமே சென்னையின் தண்ணீர் பஞ்சம் முடிவுக்கு வரும். இதனால் எப்போது சென்னையில் மழை பெய்யும் என மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
ஏமாற்றிய கோடை மழை
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை ஓரளவுக்கு சென்னை மக்களுக்கு கைக்கொடுக்கும் ஆனால் இந்த ஆண்டு கோடை மழையும் சென்னை மக்களை ஏமாற்றி விட்டது.
வானிலை மையம் அறிவிப்பு
இதனால் குடிநீர் மற்றும் அன்றாட தேவைக்கான தண்ணீருக்கு மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மக்கள் சந்தோஷப்படும் வகையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாளை முதல் வெப்பம் குறையும்
அதாவது, சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதேநேரத்தில் இன்று அனல் காற்று வீசும் என்றும், 15ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் முழுவதும் வெப்பத்தின் அளவு குறையும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை பெய்யும்
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாளை முதல் மழை
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூரில் இன்று அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வெப்பச்சலனம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
கணிப்பு பலிக்கனுமே
வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு சென்னை மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இருப்பினும் வானிலை மையத்தின் கணிப்பு பலித்து நிச்சயம் மழை பெய்ய வேண்டும் என்றும் சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.