கூட்டணி கட்சிகளிடம் வாயை கொடுத்து வசமாக சிக்கிய துரைமுருகன்?.. ஸ்டாலின் கோபம்.. அடுத்தது ஆக்ஷன்தான்!
சென்னை: 32 ஆண்டுகளாக தொகுதி பங்கீட்டு குழுவில் இருந்த துரைமுருகன் தற்போது அக்குழுவிலிருந்து திடீரென நீக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டணி கட்சித் தலைவர்களின் மனம் புண்படும்படியாக பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொதுச் செயலாளர் என்ற முறையில் அவர் அறிக்கையை மட்டும் விட்டால் போதும் என ஸ்டாலின் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக உறுதியான தகவல்கள் ஏதும் தெரியவில்லை.
ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தலுக்காக தொகுதி பங்கீடு குழு, வேட்பாளர் தேர்வு குழு என இருக்கும். இதில் நம்பிக்கைக்குரிய மூத்த நிர்வாகிகள் இடம் பெற்றிருப்பர். கள நிலவரங்களை அலசி ஆராய்ந்து கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்கலாம், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பதை தலைமைக்கு பரிந்துரைப்பர்.
துரைமுருகன்
அந்த வகையில் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவில் 1989 ஆம் ஆண்டு முதல் இருந்து வருபவர் துரைமுருகன். இவர் எப்போதும் கூட்டணி கட்சித் தலைவர்களிடம் அதிக உரிமை எடுத்து பேசுவார். இவரது பேச்சில் நகைச்சுவையும் நக்கல் நய்யாண்டியும் இருக்கும். இவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததை அவர் விளக்கும் போது கூட அதிகாரிகள் வரும் போது நான் குளிச்சிகிட்டு இருந்தேன் என கூலாக சொன்னார்.
எங்க போறது
இதை கேட்டவர்களுக்கு சிரிப்பு வந்தது. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி வந்தார் துரைமுருகன். இரு கட்சிகளும் தலா 15 இடங்கள் ஒதுக்கும்படி கேட்டதாக தெரிகிறது. அதற்கு துரைமுருகனோ எல்லாரும் 15, 20, 25, 30னு கேட்டா நாங்க எங்க போறது என நக்கலாக கேட்டாராம்.
கருணாநிதி
அதோடு விடாமல் ஆளுக்கு 2 சீட்டுக்கு மேல் தரக் கூடாது என ஸ்டாலின் கூறிவிட்டதாக இரு கட்சி தலைவர்களிடமும் முகத்தில் அடித்தது போல் துரைமுருகன் பேசியதாகவும் இது ஸ்டாலின், உதயநிதி, பிரசாந்த் கிஷோர் ஆகியோரின் காதுகளுக்கு போய் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. கூட்டணி கட்சியினரை அனுசரித்து செல்வதை கருணாநிதி வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆஃப்
அந்த இரு கட்சிகளும் சிறுபான்மையினரின் நலனுக்காக பாடும்படும் கட்சிகளாகும். அவர்களை உதாசீனப்படுத்துவது நமக்கு நல்லதில்லை என பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினை உஷார்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சிக்கு வருவதை லட்சியமாக கொண்டுள்ள ஸ்டாலின் கூட்டணியில் சலசலப்பு ஏற்படாமல் இருக்க துரைமுருகனை ஆஃப் செய்ய முடிவு செய்தார்.
அறிவுறுத்தல்
அதன்படி தொகுதி பங்கீட்டு குழுவிலிருந்து துரைமுருகனை நீக்கியதாக கூறப்படுகிறது. மேலும் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு இந்த முறை சீட் கொடுக்க வேண்டாம் என்ற நினைப்பில் ஸ்டாலின் உள்ளாராம். இதையேதான் பிகேவும் சொல்லியுள்ளாராம். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நல்லது, பழையவர்களுக்கே கொடுத்தால் திமுக ஓட்டு வேறு எங்காவது செல்ல வாய்ப்பிருக்கிறது என அறிவுறுத்தியுள்ளாராம் பிகே.