திமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக!
Recommended Video
சென்னை: புதிய கட்சிகள்தான்.. ஆனாலும் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் 3-வது இடத்துக்கு வர கடும் போட்டியில் குதித்துள்ளன. தமிழக அரசியலில் 3-வது இடத்தை பிடிக்க போவது யார் என்பதில் நிமிடத்துக்கு நிமிடம் டென்ஷன் எகிறி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ஜூனியர் விகடன் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. அதன்படி, இடைத்தேர்தலில் திமுகதான் முன்னோக்கி பயணிக்கும் என்று சொல்லப்பட்டது. மேலும் பெரும்பாலான இடங்களில் அமமுகவும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்றவை பல தொகுதிகளில் கணிசமாக ஓட்டுக்களை பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது. இது இப்போது நூற்றுக்கு நூறு உண்மையாகி உள்ளது.
திமுக முன்னிலையில் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல, அனைத்துத் தொகுதிகளிலும் 3வது இடத்தைப் பிடிக்க அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யத்திற்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.
ஆந்திராவில் தெலுங்குதேசம் காலி.. நாயுடு பரிதாபம்.. 'சிஎம்' ஆகும் ஜெகனுக்கு திருப்பதி லட்டு பார்சல்
பலவீனம்
அதிமுகவுக்கு ஓட்டு வங்கி குறைந்து வருவதற்கு காரணம் அமமுகதான். அதிமுக இரண்டாக உடைந்ததுதான் முக்கிய பலவீனமே. அதனால்தான் அதிமுகவின் தீவிர தொண்டர்கள், அக்கட்சியின் ஆதரவாளர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து, இப்போது வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அமமுகவுக்கும் ஓரளவு வாக்குகள் கூடி உள்ளது.
சின்னம்
தேர்தல் ஆணையம் அலைக்கழித்து சின்னத்தை தந்தாலும், அமமுக மீது என்னத்தையாவது ஒரு பழியை போட வேண்டும் என்ற பேரில், அதிமுக பண பட்டுவாடா என்ற பெயரில் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி அதில் துப்பாக்கி சூடு வரை சென்று கொஞ்சம் ஓவர் ஆகிவிட்டது. கடைசியில் இது அமமுகவுக்கு பிளஸ் ஆனதுதான் மிச்சம். ஓட்டுக்கு பணம் என்பதை அதிமுக, திமுகவுக்கு இணையாக அமமுகவும் கையில் எடுத்தது. நிறைய உள்ளடி வேலைகளில் இறங்கியது. அதிமுக நிர்வாகிகள், பூத் ஏஜெண்டுகளை விலைக்கு வாங்கியது, என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதனால்தான் 3-வது நிலைமைக்கு அமமுக வந்துள்ளது.
மாற்றம்
அதேபோல, இந்த தேர்தலில் ஒட்டுமொத்த மாநிலத்தையும் தங்கள் பக்கம் திரும்ப வைத்தவர்கள் கமலும் சீமானும்! இளம் வாக்காளர்களை, புதிய வாக்காளர்களை, இளைஞர்களை தங்கள் பக்கம் திசை திருப்பி உள்ளனர். காரணம், ஏதாவது மாற்றம் கிடைக்காதா, மாறுதல் வராதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடுதான்!
ட்ரெண்ட்
சீமானின் இந்த முறை பிரச்சாரம் மிகப் பெரிய வீச்சை கொண்டிருந்தது. இணையத்தில் ட்ரெண்ட்டில் இருந்தது சீமான் பேச்சுக்கள்தான். மக்களை கவர்ந்தது மட்டுமல்ல, யோசிக்க வைத்ததும் சீமானின் பேச்சுக்கள்தான். திராவிட கட்சிகளே அரண்டு போயின சீமானின் பேச்சில்!
வீரியம்
ஒரு கட்டத்தில் பயந்து நடுங்கவே செய்தன என்பதுதான் உண்மை! தன்னுடைய பேச்சில் வீரியம், காரம் குறையாமல் அதேசமயம் நாக்கை பிடுங்கி கொள்வது போல கேள்விகள் கேட்டது, சீமானை 3-வது இடத்துக்கு கொண்டு வரும் அளவுக்கு உயர்த்தி உள்ளது. இதற்கு அடுத்து கமல்ஹாசன். ஹைடைக் கட்சி, அறிவாளிகள் குரூப், படைப்பாளிகள் தரப்பு போன்றவற்றுக்கு மட்டும்தான் மக்கள் நீதி மய்யம் என்ற முத்திரையை தூக்கி எறியப்பட்டது கமலின் அணுகுமுறையால். புதைந்துபோன கிராம சபை கூட்டங்களை நடத்தியதன் விளைவு, மக்கள் மனதில் கமல் ஆழமாகவே நுழைந்தார்.
சிந்தனையாளர்கள்
யாருடனும் கூட்டணி இல்லை என்ற துணிச்சலான அறிவிப்பு ஆச்சரியத்தை தந்தது. நேர்காணல், வேட்பாளர் அறிவிப்பு போன்றை முதல் அனைத்திலும் புதுசு.. அனைத்திலும் வித்தியாசம்! இளைஞர்கள், படித்தவர்கள், புத்திசாலிகள், சிந்தனையாளர்கள் அப்படியே விழுந்தனர் கமலின் அரசியல் முன்னெடுப்பில்! அதனால்தான் 3-வது இடத்துக்கு வர கமலால் நடந்துள்ளது!
சஸ்பென்ஸ்
ஆக மொத்தம், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வாக்குகளை பெற்று வருகின்றன. இதில் யார் 3-வது இடத்துக்கு வர போகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. இத்தனைக்கும், கமலும், சீமானும் ஏதாவது ஒரு இடத்தில் களம் இறங்கி இருந்தால், இந்த 3-வது இடத்தை எளிதாக கடந்திருக்கலாம்.
சரியான சவுக்கடி
ஒரு இடத்திலும், ஒரு தலைவரும் போட்டியிடாத நிலையில், 3-வது இடத்துக்கு இந்த கட்சிகள் வந்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது. இது காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கு பெரிய இழுக்கு.. சரியான சவுக்கடி! மக்கள் மாற்றத்தை தேட ஆரம்பித்து விட்டார்கள் என்பது இந்த புதிய கட்சிகளின் வாக்கு கணிப்பில் வெளிப்பட்டுள்ளது!