சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
சென்னை: சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து விவசாய நிலங்களில் இருந்து கிணறுகள் மூலம் குடிநீர் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் விநியோக செயல்பாடுகள் குறித்து திருவள்ளூரில் உள்ள மாகரல் குடிநீர் நீரேற்று நிலையத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வேலையை உள்ளாட்சித் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை ஒரு நாளுக்கு 800 எம்.எல்.டி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 525 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் தேவை அதிகம் இருக்கும் பட்சத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மாகரல் நீரேற்று நிலையத்தில் 60 எம்.எல்.டி நீரில் இருந்து அதிகரிக்கப்பட்டு கூடுதலாக 8 எம்.எல்.டி தண்ணீர் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இது போன்ற சூழ்நிலைகளில் எதிர்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்பி மக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது.
நவம்பர் மாதம் வரைக்கும் குடிநீர் விநியோகிக்க தண்ணீர் இருப்பு இருப்பதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். எந்த பள்ளிகளும் தண்ணீர் இல்லாமல் மூடப்படும் சூழ்நிலை இல்லை எனவும், விவசாய கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீருக்கு உரிய விலை கொடுத்து வருவதாகவும், விவசாயிகள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில், விலை அதிகரித்து தருவது குறித்து பரிசீலிப்போம். கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.