நிவாரண உதவிகளுக்கு தடையில்லை... திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளியோருக்கு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் நிவாரண உதவிகள் செய்ய எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையர், மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்களையும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். பின்னர் அந்த உத்தரவில் திருத்தங்கள் செய்து தடை என்பதை கட்டுப்பாடுகளாக மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்டோர் சார்பில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த மனுக்களில், பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் வழங்கி வருவதாகவும், அப்போது சமூக விலகல் பின்பற்றப்படுவதாகவும், முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தே உதவிகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகள் அளிக்கலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், உணவு பொருட்கள், மளிகைப் பொருள் விநியோகிக்கும் போது 48 மணி நேரத்துக்கு முன்பே உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் மட்டும் போதும் அனுமதி பெறத் தேவையில்லை என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
மதில்கள்.. அகழிகள்.. 2 முறையாவது யூ-டர்ன்.. இப்படித்தான் கொரோனாவை 'ஓட ஓட' விரட்டுது பெங்களூர்
இதனிடையே நிவாரண உதவிகள் வழங்கும் போது மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.