நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு
சென்னை: துப்பாக்கி சூட்டிற்கு பிறகு மக்களை சமாதானப்படுத்தவே தங்களது ஆலையை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டிருப்பதாக, ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு, தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளிலேயே அதிகமாக மாசு வெளியிடுவது ஸ்டெர்லைட் தான்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் தான் தூத்துக்குடியில் மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மனுவிற்கு, ஆலை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளித்து தற்போது அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக, எந்த குற்றச்சாட்டும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனு தவறானது. கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச உருக்காலைகளுக்கு இணையாக தூத்துக்குடி நகரின் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு, 500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்று சூழல் பாதிப்பு எதுவும் இல்லை என கடந்த 2011-ம் ஆண்டு என்.ஐ.ஆர்.ஐ அமைப்பு தெரிவித்துள்ளது. எந்த ஆவண ஆதாரங்களும் இல்லாமல் கொள்கை முடிவென கூறி, ஆலையை மூட அரசு உத்தரவிட்டது வருத்தத்திற்குரியது என ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறியுள்ளது.
தங்களது ஆலையை மூடிய பிறகு காற்று மற்றும் தண்ணீர் மாசு குறைந்திருப்பதாக கூற எந்த ஆதாரமும் இல்லை என ஸ்டெர்லைட் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. கொள்கை முடிவு எடுக்க எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஆதாரமும் இன்றி கொள்கை முடிவு என்று கூறி ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையைத் மீண்டும் திறக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2015-16, 2017-18 ஆகிய ஆண்டுகளில் எங்களது ஆலையை இயக்குவதற்கான ஒப்புதலை அரசு புதுப்பித்தது.
ஆனால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் நெருக்கடியால், 2018-19-ம் ஆண்டு எங்கள் ஆலை இயங்குவதற்கான ஒப்புதலை வழங்க மறுத்து ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட்டை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை மக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. எனவே அவர்களை சமாதானபடுத்தவே ஆலையை நிரந்தரமாக மூட, அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.