தேர்தலில் நின்றதாக வரலாறு இல்லை... ஆனாலும் மீண்டும் மீண்டும் எம்.பி.யாகும் வாசன்
சென்னை: அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகிறார்.
இதுவரை பொதுத்தேர்தலில் அவர் போட்டியிட்டதாக வரலாறே இல்லை, மூன்று முறையும் ராஜ்யசபா மூலமாகவே எம்.பியாகி இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்.
இந்நிலையில் வாசன் மீண்டும் எம்.பி.யாக உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஒரு சிலர் அவரை தனிப்பட்ட முறையில் அழைத்து வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.
ராஜ்யசபா எம்பி சீட்டை தொடர்ந்து ஜிகே வாசனுக்கு அடுத்த சூப்பர் வாய்ப்பு? மத்திய அமைச்சராகிறாரா?
3-வது முறை
தனது தந்தை மூப்பனார் மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வந்த ஜி.கே.வாசன் அவர் நடத்தி வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கலைத்து காங்கிரஸ் கட்சியோடு ஐக்கியமானார். அதற்கு பரிசாக 2002-ல் அவருக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்ததும் வாசனுக்கு தமிழக கோட்டாவில் மத்திய அமைச்சர் பதவி தேடி வந்தது. மத்திய புள்ளியியல் துறை அமைச்சராக இருந்த இவர், தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கும் தலைவரானார். இதன் மூலம் கட்சியில் வாசனுக்கு செல்வாக்கு அதிகரித்தது.
கோஷ்டி
இதனிடையே ப.சிதம்பரத்துக்கும் வாசனுக்கும் நடைபெற்ற பனிப்போர் காரணமாக தமிழகத்தில் காங்கிரஸ் மெதுவாக கரையத் தொடங்கியது. யார் பின்னால் அணிவகுப்பது எனத் தெரியாமல் நிர்வாகிகள் விழி பிதுங்கினர். இதற்கிடையே யார் மூலம் ஆதாயம், நன்மை அடைய முடிந்ததோ அவர்கள் பின்பு நிர்வாகிகள் அணி வகுத்தனர். வாசன் அணி, சிதம்பரம் அணி ஆகிய இரு அணிகளும் சமபலத்துடன் தமிழகத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் டெல்லியில் சிதம்பரம் கை ஓங்கியதை அடுத்து வாசன் தாம் ஓரங்கட்டுப்படுவதாக உணர்ந்தார்.
மத்திய மந்திரி
கடந்த 2008-ம் ஆண்டு மீண்டும் ராஜ்யசபா சீட் பெற்று எம்.பி.யாகிய வாசனுக்கு பிரனாப் பரிந்துரையில் மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத் துறை கிடைத்தது. அமைச்சரவையில் மிகவும் வெயிட்டான துறைகளில் கப்பல் போக்குவரத்து துறையும் ஒன்று. ஆனால் அந்த துறையை பயன்படுத்தி வாசன் தனக்கு எந்த வளத்தையும் பெருக்கிகொள்ளவில்லை. மிஸ்டர் கிளீன் இமேஜுடன் செயல்பட்டார். இதை அப்போதே பாஜகவினர் கவனிக்கத் தவறவில்லை. இதனால் வாசன் மீது எந்தக் குற்றச்சாட்டையும் பாஜக முன்வைத்ததில்லை. ஆனால் ஏனைய மத்திய அமைச்சர்களை பற்றி அப்போதைய பாஜக தலைவர்கள் சரமாரி புகார் கூறி வந்தனர்.
மீண்டும் தமாகா
ராகுல்காந்தி அகில இந்திய அளவில் கட்சியில் முன்னிலைப்படுத்தப் பட்டபோது வாசனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கி நடத்தி வருகிறார். இதி குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் 2002-ல் த.மா.காவை கலைத்துவிட்டு காங்கிரஸில் ஐக்கியமானதற்காக ராஜ்யசபா சீட் பெற்றார் வாசன். இப்போது 2020-ல் காங்கிரஸில் இல்லாமல் தனிக்கட்சியாக த.மா.கா.வை நடத்துவதால் ராஜ்ய சபா சீட் பெற்றுள்ளார் வாசன்.
ஒரு சீட்
கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு வாசன் போட்டியிடவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ.வும், த.மா.கா. நிர்வாகியுமான பட்டுக்கோட்டை ரெங்கராஜனின் அண்ணனை நிறுத்தினார். ஏனென்றால் அப்போதே அவருக்கு தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எப்படி வரும் என்பது தெரியும். இதனால் அரசியலில் மிக சாதுர்யமாக செயல்பட்டு, தேர்தலில் போடியிட்ட வரலாறு இல்லையென்றாலும் மூன்றாவது முறையாக எம்.பியாகிறார் வாசன்.