இரட்டை ஜடை போட்டது குற்றமா.. மாணவியிடம் விசாரணை.. கோவை கல்லூரியில் ஆள்மாறாட்டம் இல்லை என உறுதி
Recommended Video
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, உதித் சூர்யா என்ற மாணவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அவர் சிபிசிஐடி காவல்துறையினரால் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர்களின் உருவ சரிபார்ப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரியில் மாணவி ஜோதிகா மற்றும் மாணவர் சிவ ராமச்சந்திரன் ஆகியோரின் பழைய புகைப்படத்திற்கும், இப்போதுள்ள உருவத்திற்கும் வேறுபாடு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவ கல்லூரி துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. சென்னையில் மருத்துவ கல்லூரி இயக்குனர் நாராயண பாபு செய்தியாளர்களுக்கு இதுபற்றி இன்று அளித்த பேட்டி:
மாணவர்கள் இருவரின் புகைப்படங்கள் கொஞ்சம் வித்யாசமாக இருப்பதாக 23ஆம் தேதி எங்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நாங்கள் அமைத்தோம். மாணவர்கள் இருவர் மற்றும் அவர்களின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினோம்.
அவர்களின் சான்றிதழ்கள், நீட் தேர்வு ஹால் டிக்கெட், அடையாள அட்டை ஆகியவற்றுடன் எங்களிடம் உள்ள ஆவணங்களையும் சேகரித்து ஒப்பிட்டு பார்த்தோம். இந்த ஆய்வின் முடிவில், இரு மாணவர்களுமே போலியானவர்கள் கிடையாது என்பது உறுதியாகி உள்ளது.
புகைப்படங்களில் லேசான வித்தியாசம் இருந்தாலும், இதுபோன்ற பிரச்சினை உருவாகிறது. எனவே அடுத்த வருடம் முதல் பயோமெட்ரிக் நடைமுறையை மாணவர் சேர்க்கையில் கொண்டுவரவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பயோமெட்ரிக் மற்றும் கைரேகை பதிவு ஆகியவை இனி வரும் காலங்களில் அமலுக்கு கொண்டுவரப்படும்.
விண்ணப்பம், தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை ஆகிய காலகட்டங்களில் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட மாணவரின் விவரங்கள் ஓபன் ஆகும். எனவே இதில் யாரும் மோசடி செய்ய முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களான சிவ ராமச்சந்திரன் மற்றும் ஜோதிகா ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் பேசினார்.
ஜோதிகா கூறுகையில், நான் அளித்த புகைப்படத்தில் இரட்டை ஜடை போட்டது போன்ற தோற்றத்தில் நான் இருந்தேன். அது பள்ளிக்காலத்தில் எடுத்த போட்டோ. இப்போது முடியை திருத்தியுள்ளேன். எனவே, இப்போது அப்படி இல்லை. இதற்காகவெல்லாம் சரிபார்ப்பு என்று என்னையும் கூட்டி வந்து விட்டார்கள். முடி வெட்டியதுதான் இப்போது பிரச்சினையாகிவிட்டது, வேறொன்றுமில்லை என்றார் ஆதங்கத்தோடு.
ராமச்சந்திரன் கூறுகையில், இப்போது இருக்கக்கூடிய உருவத்திற்கும், பழைய புகைப்படத்திற்கு வித்தியாசம் இருக்கிறது. என்னிடம் அப்போது ஒரே ஒரு போட்டோ தான் இருந்தது. அது பழைய போட்டோ. அதனால் குழப்பம் ஏற்பட்டு, விசாரணை நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.