தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை... வைகோ கருத்து
சென்னை: தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதை பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டாலும், தமிழகத்தை பொறுத்தவரை திமுக- காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதே போல், இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.
இந்தநிலையில், திமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் கொள்ளை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள் என்றும் வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில், ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்த போதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அண்ணா திமுக அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.