கேரளாவில் பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை - செங்கோட்டையன்
கேரளாவில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் திறக்கப்படாது.
சென்னை: கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
காரணம் பள்ளிகள், கல்லூரிகள் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக உள்ளன. இதனால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் தொலைக்காட்சிகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாலும் அது பற்றி எந்த முடிவும் தற்போது எடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.
கேரளாவில் பள்ளிகள் திறப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பத்தற்கான பணிகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைவிட கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது என்றாலும் ஜனவரி மாதத்தில்தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறி வருகின்றனர் இந்த நிலையில் இங்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளைக் கூறினார். அப்போது அமைச்சரிடம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்று தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளில் 40 சதவிகிதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையத்தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என ஆசிரியர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தனியார் பள்ளியில் பணியிழந்த ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் அமைச்சர் செங்கோட்டையன்.