108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்
சென்னை: தமிழகத்தில் 108 சேவையின் கீழ் இயக்கப்படுவதில் சுமார் 70 ஆம்புலன்ஸ்கள் தகுதியற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குடும்பநலம் மற்றும் பொதுசுகாதாரதுறை சார்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது இத்திட்டத்தின் கீழ் சுமார் 300 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிநவீன உயிர் காக்கும் மருத்துவ வசதிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
பச்சிளம் குழந்தைகளுக்கென 175 வாகனங்கள் என தமிழகம் முழுவதும் சுமார் 1,000 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 108 சேவையின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.
தனியார் நிறுவன நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 108 சேவையில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு, மருத்துவ உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என மொத்தம் 4,500 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் 3 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 6 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களில், முழுபராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நிதியை ஆம்புலன்ஸ் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
ஆனால் வாகன கம்பெனி சர்வீஸ் நிலையங்களில் ரிப்பேர் செய்யாமல், தனியார் மெக்கானிக்குகளிடம் ஆம்புலன்ஸ் ரிப்பேர் செய்யப்படுகிறது. அவர்கள் தரமற்ற ஸ்பேர் பார்ட்ஸ்களை பொருத்துவதால், அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு செய்யப்படவில்லை என தொிகிறது.
உடல்நிலை பாதித்தவரை விரைந்து சென்று மருத்துவமனைகளில் சேர்க்க பறந்து செல்லும் ஆம்புலன்ஸ்களில் பிரேக் பெயிலியர், ஆக்சில் கட் போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதாக பகீர் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
எனவே 108 ஆம்புலன்ஸ்களில் சீரான மற்றும் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் சுகாதாரத்துறை அறிவித்தபடி 108 ஆம்புலன்ஸ் சேவையை விரிவுப்படுத்தும் வகையில், கூடுதலாக 1000 ஆம்புன்ஸ்களை பொதுமக்கள் பயன்படும் வகையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.