இந்த வாதம் தான்.. வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லையென நீதிபதிகள் உத்தரவிட காரணம்!
சென்னை: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான 2 கட்டங்களாக நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது..
அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27 ம் தேதி ஒரு கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது...
இந்நிலையில், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு அதில் குறிப்பிட்ட ஒரு கட்சி அதிகப்படியான இடங்களை வென்றால், அதன் தாக்கம் நகராட்சி அமைப்புகளுக்கு நடத்தப்படும் தேர்தலிலும் எதிரொலிக்கும் எனவும், அத்தகைய முடிவு ஒரு கட்சிக்கு சாதகமாகவும் மற்ற கட்சிகளுக்கு பாதகமாகவும் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது..
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது,மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,
உள்ளாட்சி தேர்தலை 3 மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க உச்சநீநிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இரண்டு கட்டமாக தேர்தல் முடிவுகளை வெளியிட சட்ட ரீதியாக எந்ந தடையும் இல்லை எனவும் வாதிட்டார்..
மாநில தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சிகளில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வெவ்வேறானவர்கள் எனவும்,மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கு வாக்காளர்களின் அறிவை குறைத்து எடை போடுவது போன்று அமைந்துள்ளதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்