வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறட்டும்... கூட்டணி பற்றி அப்புறம் பேசலாம் - டாக்டர் ராமதாஸ்
வன்னியர் இட ஒதுக்கீடு பற்றிய கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: அமைச்சர்கள் யாருடனும் அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, தமிழக அரசை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதிமுக தலைவர்கள் கட்சியின் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி பேச தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில், பாமக நிறுவனர் ராமதாசை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு பற்றியும், சட்டசபைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்தும் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், தைலாபுரத்தில் நடந்தது என்ன என்றும் என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் பரிசு ரூ.2500 பெறுவதற்கான கால அவகாசம் ஜன.25 வரை நீட்டிப்பு
இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், 'தமிழக அமைச்சர்கள் திரு. பி.தங்கமணி, திரு.எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்
பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர். அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தனது பதிவில் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.