அதிமுக மற்றும் மோடி ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற வழியே இல்லை.. ஸ்டாலின் ஆவேசம்
Recommended Video
சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் தேர்தல் அதிகாரிகள் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டு இருப்பது, ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் சவால் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக மற்றும் மோடி ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற வழியே இல்லை என சாடியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த முடியாமல் தலைமை தேர்தல் அதிகாரியும், தேர்தல் ஆணையமும் திணறி நிற்கின்றனர். ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. அதேபோல தருமபுரியில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை கைப்பற்றி பாமகவுக்கு வாக்களித்ததையும் தடுக்கவில்லை.
பொன்பரப்பியில் வாக்குப்பதிவில் நடந்த தில்லுமுல்லுகளையும் தேர்தல் ஆணையத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். எனவே வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வாக்கு இயந்திரங்கள் இருந்த அறைக்குள் நுழைந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
பாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு.. தேர்தல் அதிகாரி அதிரடி பரிந்துரை!
தாசில்தார் உள்ளிட்டோர் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அத்துமீறி நுழைய அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணும் மையங்களை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் அதிகாலை 3 மணி அளவில் உள்ளே நுழைந்து, இரண்டு மணி நேரம் மேல் அங்கேயே இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்திருக்கலாம் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.