கையசைவில் மெசேஜ் அனுப்பிய விஜய்.. மறுநாளே வரித்துறை சம்மன்.. அரசியலுக்கு 'இழுக்கப்படும்' விஜய்!
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதற்கும் அவரின் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் மக்கள் கூடியதற்கும் நிறைய தொடர்பு உள்ளது என்கிறார்கள்.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதற்கும் அவரின் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் மக்கள் கூடியதற்கும் நிறைய தொடர்பு உள்ளது என்கிறார்கள். இதற்கு பின் பல அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள்.
நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் வேகமாக தயாராகி வருகிறது. கைதி படம் எடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை எடுக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்கிறார்.
விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை தொடர்ந்து இதன் ஷூட்டிங் பெரிய வைரல் ஆகியுள்ளது. நெய்வேலி என்எல்சியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாஸ்டர் படத்தை பார்க்க கூட்டம் அதிக அளவில் கூடி வருகிறது. வரிசையாக விஜய் ரசிகர்கள் என்எல்சிக்கு சென்று அங்கு ஷூட்டிங்கை பார்த்து வருகிறார்கள்.
பெரிய கூட்டம்
இந்த நிலையில் நேற்று மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை காண பெரிய அளவில் கூட்டம் கூடியது. முதலில் வருமான வரித்துறை விசாரணை முடித்து ஷூட்டிங் ஸ்பாட் வந்த விஜய்க்கு பெரிய அளவில் பட்டாசு வெடித்து படக்குழு வரவேற்பு கொடுத்தது. கிட்டத்தட்ட அந்த படப்பிடிப்பு தளம் ஒரு திருவிழா போல காட்சி அளிக்க தொடங்கியது. அங்கிருந்த விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் தளபதி கோஷம் எழுப்பி விஜயை வரவேற்றனர். அன்றில் இருந்தே மாஸ்டர் படத்தை பார்க்க கூட்டம் அதிக அளவில் கூடி வருகிறது.
நேற்று கூட்டம்
நேற்றுதான் அங்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் மக்கள் கூட்டம் கூடியது. வரிசையாக விஜய் ரசிகர்கள் என்எல்சிக்கு சென்று அங்கு ஷூட்டிங்கை பார்த்து வருகிறார்கள். நேற்று ரசிகர் கூட்டத்தை பார்த்து வெளியே வந்த விஜய் அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்தார் . அதன்பின் விஜய் அங்கிருந்து கொண்டே ரசிகர்கள் உடன் செல்பி எடுத்தார். விஜயை பார்த்ததும் அங்கே இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷம் எழுப்பினார்கள்.
என்ன மெசேஜ்
விஜயின் இந்த செயல் பெரிய வைரலாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் ரசிகர்களை பார்த்து மட்டும் கையசைக்கவில்லை. அவர் அரசியல் மெசேஜ் ஒன்றை இதன் மூலம் கொடுக்கிறார். தனக்கு இருக்கும் மாபெரும் ஆதரவை அவர் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறார். சில கட்சிகளுக்கு, தன்னுடைய கையசைவின் மூலம் அவர் பலருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார் என்று அவரின் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் அவ்வளவு பெரிய கூட்டத்துடன் செல்பி எடுத்தார்.
சொத்து
இந்த புகைப்படத்தை அவர் எதிர்காலத்தில் கண்டிப்பாக பயன்படுத்துவார். ரசிகர்கள்தான் விஜய் சேர்த்து வைத்து இருக்கும் சொத்து. அதனால் அவர் தைரியமாக இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோல் இன்னொரு பக்கம் விஜயின் இந்த செயல் ஆளும் தரப்பில் சிலரை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அதிமுகவிலும், பாஜகவிலும் விஜய் மீது பலர் கோபத்தில் இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வர நினைக்கிறார், அதை விட கூடாது என்று இரண்டு கட்சியிலும் சிலர் நினைக்கிறார்கள்.
சோதனை மேல் சோதனை
இதற்கான காய்கள் ஏற்கனவே நகர்த்தப்பட்டு வருகிறது . விஜயின் அரசியல் பிரவேசத்தை தடுக்கவே இந்த வருமான வரித்துறை சோதனை என்றும் கூறுகிறார்கள். விஜய் வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனாலும் விஜய்க்கு தற்போது வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதிலும் முதலில் நேரில் ஆஜராக மூன்று நாள் அவகாசம் கொடுத்தது. நேற்று அக்கூட்டத்தை பார்த்த பின், இன்றே நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை நெருக்க தொடங்கி உள்ளது.
எண்ணம் இல்லை
அவரின் இந்த மாபெரும் கூட்டத்திற்கு வந்த ரியாக்சன்தான் இந்த சம்மன் என்கிறார்கள். விஜய்க்கு இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கண்டிப்பாக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வார். அதை தடுக்கத்தான் இப்போதே அவரை இப்படி நெருக்குகிறார்கள். இந்த நிலை நீடித்தால் கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு விரைவில் வர வாய்ப்புள்ளது என்றும் அவருக்கு நெருக்கமானவர் கூறுகிறார்கள்.