சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்.. சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கு 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்
சென்னை: நீதிமன்றம் குறித்து பேசிய நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. அவர் மாணவர்கள் மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்த போது நீதிமன்றத்தை அவ்வாறு கூறிவிட்டார். மற்றபடி அவரது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பி சாஹுவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
கொரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்த வேண்டாம் என அனைத்து தரப்பினரும் கூறி வந்த நிலையில் நேற்றைய தினம் நீட் தேர்வு பல்வேறு குளறுபடிகளுடன் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் 3 பேர் தேர்வுக்கு முந்தைய நாள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டனர்.
இது தமிழக அரசியலில் புயலை கிளப்பியது. இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் எனது மனம் இறந்த 3 மாணவர்களின் குடும்பத்தினரை பற்றியே இருக்கிறது. அவர்களது வலியை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
'நீட் மரணங்கள்' மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழை காணும் சாணக்கியர்கள்.. சூர்யா கொதிப்பு
சூர்யா நீதிமன்றம்
அந்த அறிக்கையில் அவர் கூறுகையில் கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத என உத்தரவிடுகிறது என சூர்யா நீதிமன்றம் குறித்து தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற கட்டமைப்பு
சூர்யாவின் இந்த விமர்சனத்திற்கு எதிர்வினையாக நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் என்னுடைய கருத்துபடி அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு, ஈடுபாட்டையும் நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைத்து மதிப்பிடும் வகையில் உள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
அது மட்டுமில்லாமல் அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். இதனால் நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு எடுக்க என தெரிவித்துள்ளார்.
கருத்து சுதந்திரம்
இந்த நிலையில் இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான எம் எச் ஜவாஹிருல்லா கூறுகையில் கருத்துக் சுதந்திரத்தை சிதைக்கும் வகையில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கூடாது. சூர்யா கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டதால் கருத்துக் சுதந்திரத்திற்கு எதிரானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யா அறிக்கை
அது போல் ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம் கூறுகையில் சூர்யாவின் கருத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கெல்லாம் வேண்டாம். மேலும் அவர் கூறியது நீதிமன்ற அவமதிப்பா இல்லையா என ஆராயாமல் பெருந்தன்மையாக விட்டுவிடலாம். நீட் மீதான கோபத்தின் வெளிப்பாடே சூர்யாவின் அறிக்கை.
பெருந்தன்மையாக விட்டு விடலாம்
நீதிமன்ற நடைமுறைகளை ஒரே ஒரு நாள் நடைபெறும் தேர்வுடன் ஒப்பிட முடியாது என டி சுதந்திரம் தெரிவித்தார். அது போல் நீதிமன்றம் குறித்து சூர்யா உள்நோக்கத்துடன் தெரிவித்திருக்க மாட்டார். எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடராமல் பெருந்தன்மையாக விட்டு விடலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி கே என் பாட்ஷா தெரிவித்துள்ளார்.
6 முன்னாள் நீதிபதிகள்
சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளார்கள். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ பி சாஹுவுக்கு 6 முன்னாள் நீதிபதிகளான சந்துரு, பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், அக்பர் அலி, கண்ணன் ஆகியோர் கூறுகையில் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை.
மாணவர்கள் மரணம்
4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் என்ற முறையில் கேட்டுக்கொண்டுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதாக தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது தங்கள் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.