’தலைவர்’ டேபிளில் பட்டியல்! டிக் அடிக்கத் தயாராகும் ஸ்டாலின்! ஆவலோடு காத்திருக்கும் உடன்பிறப்புகள்!
சென்னை : திமுகவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கும் நிலையில் இன்னும் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு அணிகளில் மாற்றங்களும் நியமனங்களும் இருக்கும் என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள்.
திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலில் ஒன்றிய நகர அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்ற பலமான அஸ்திவாரம் போடப்பட்டது.
அடுத்ததாக கட்சியின் ஒன்றிய செயலாளர்கள், அடுத்ததாக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருக்கும் போதே கடுமை சோதனைகளை சந்தித்தார்கள் என்பதற்கான ஆளும் கட்சியாக இருக்கும் போது அவர்களே பதவியில் நீடிக்க வேண்டுமென தலைமை விரும்பியதால், ஏறக்குறைய பழைய நிர்வாகிகளே பதவியில் தொடர்கின்றனர்.
போச்சே! அண்ணாமலை அறிக்கையில் இருக்கும்
முதல்வர் ஸ்டாலின்
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் தலைவராக முதல்வர் ஸ்டாலின் திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைமை புதிய பட்டியல் ஒன்றினை வெளியிட்டது. அதில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகளிரணி
கனிமொழி நியமனம் காரணமாக காலியாக இருந்த மகளிரணி பதவி விஜயா தாயன்பனுக்கு வழங்கப்பட்டது. மேலும் திமுக மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டார். மகளிர் அணி பொறுத்த வரை துணைச் செயலாளர்கள் தொண்டரணி இணைச் செயலாளர் பிரச்சார குழு சமூக வலைதள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கும் பலர் நியமனம் செய்யப்பட்டனர்.
அடுத்தடுத்து அறிவிப்புகள்
திமுக இளைஞரணி செயலாளராக நடிகர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டதோடு துணை செயலாளராக ஜோயல், இன்பா, இளையராஜா, அப்துல் மாலிக் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தாயகம் கவி, பைந்தமிழ் பாரி உள்ளிட்டோர் அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்னும் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு அணிகளில் மாற்றங்களும் நியமனங்களும் இருக்கும் என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள். மொத்தம் இருக்கும் திமுக 20 அணிகள், 11 குழுக்களுக்கான பதவிகள் பெரும்பாலும் நிரப்பட்டுள்ள நிலையில், முக்கிய பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.
புதிய பதவிகள்
திமுக இளைஞரணி, மகளிர் அணி, தொமுச, செய்தி தொடர்புசெயலாளர், அமைப்பு செயலாளர், தலைமை நிலைய செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலினை நேரடியாக ஆய்வு செய்து மாவட்ட செயலாளர்கள் உதவியுடன் நியமனம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாகிகள் தீவிரம்
மேலும் திமுகவில் முக்கிய பதவிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில் தற்போது தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பொறுப்பு காலியாக இருக்கிறது. அந்த பதவிக்கு திமுகவின் அமைப்பு செயலாளராக இருக்கும் ஆர் எஸ் பாரதி ஆர்வம் காட்டி வருகிறார். ஒருவேளை அவர் நியமனம் செய்யப்பட்டால் அவர் வகித்து வரும் பதவி காலியாகும் எனவே அந்த பதவிக்கும் ஒருவரை நியமனம் செய்ய வேண்டி வரும். மேலும் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் துறைமுகம் காஜா, பூச்சி முருகன் ஆகியோருக்கு வாரிய தலைவர் பதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஆர்வத்துடன் உடன்பிறப்புகள்
அவர்கள் அதே பதவியில் தொடரும் நிலையில் முக்கிய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மேலும் இருவர் தலைமை நிலைய செயலாளராக நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இந்த பட்டியலில் மூன்று பேரது பெயர்கள் இருக்கின்றன. இது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஏற்கனவே கூறியது போல 20 அணிகள் 11 குழுக்களில், காலியாக இருக்கும் செயலாளர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர், பகுதி செயலாளர் உள்ளிட்ட பதவிகளின் விவரங்கள் தலைமையால் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் இது குறித்த அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தலைமையில் இருந்து கடைக்குள் தொண்டர்கள் வரை அறிவிப்புகளை ஆர்வத்தோடு எதிர்நோக்கி வருகிறார்கள்.