புரேவி.. தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் நிலவரம் என்ன?.. வானிலை மையம்
சென்னை: புரேவி புயல் வளிமண்டல சுழற்சியாக மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள காரணத்தால் தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
புரேவி புயல் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே பாம்பன் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த புயலானது கடலிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மன்னார் வளைகுடாவில் நகராமல் நின்றிருந்தது.
பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை என தொடர்ந்து வலுவிழந்தது. எனினும் அது நகராமல் நிலை கொண்டுள்ளது. புரேவி புயல் வலு குறைந்தாலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் மண்டல வானிலை துறை தலைவர் பாலச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.