அப்பாடா.. அடுத்த 24 மணிநேரத்திற்கு அனல்காற்று வீச வாய்ப்பில்லையாம்.. வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அனல்காற்று வீச வாய்ப்பில்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அனல் காற்றும் வீசியது.
இதனால் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சுகின்றனர். பகல் நேரத்தில் சாலைகளில் நடமாடுவோரின் எண்ணிக்கையும் குறைந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
இன்று செம கனமழை இருக்கு.. எங்கெல்லாம் பெய்யும்.. சென்னை வானிலை மையம் கணிப்பு!
அடித்து பெய்யும் மழை
அதே நேரத்தில் மதுரை, நெல்லை, ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் அடித்து பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து வருகிறது.
அனல் குறையவேயில்லை
ஆனால் சென்னையில் மட்டும் இதுவரை ஒருநாள் கூட மழை பெய்யவில்லை. சில நேரங்களில் மேகமூட்டமாக காணப்பட்டாலும் அனல்காற்றும் புழுக்கமும் குறைந்தபாடில்லை.
கனமழை பெய்யும்
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அனல் காற்று வீசாது
சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மழை பெய்ம் போது 30 முதல் 40 கி.மீ., வரை காற்று வீசக்கூடும். தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அனல் காற்று வீச வாய்ப்பில்லை.
7 மாவட்டங்களில்..
கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறை 4 செ.மீ., சித்தேரியில் 3 செ.மீ., மழையும் பெய்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திண்டுக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.