பாமக குறிவைக்கும் தொகுதிகள் இவைதான்... விட்டுக்கொடுக்குமா அதிமுக
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் தங்களுக்கு சாதகமானவை என்று அதிமுக தலைமையிடம் லிஸ்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அதிமுக கூட்டணியில் போட்டியிட உள்ள பாமக வன்னியர் சமூக வாக்குகள் அதிகமாக உள்ள தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதிகளில் அதிமுக விட்டுக்கொடுக்குமா அல்லது தட்டிக்கழிக்குமா என்பது சில நாட்களில் தெரிந்து விடும்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலை மார்ச் 12ஆம் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாக உள்ளது. அதற்கு முன்பாக தொகுதி பங்கீடு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா இருக்குபோதே 27 இடங்களைப் பெற்றது பாமக. திமுக கூட்டணியிலும் 31 இடங்களை இதற்கு முன் பெற்றுள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் தொகுதிகளை குறைத்துக்கொண்டாக கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
23 தொகுதிகள் எவை எவை
பாமகவிற்கு எத்தனை இடங்கள் என்பதுதான் முடிவு செய்யப்பட்டுள்ளதே தவிர எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பாமக சார்பில் அதிமுகவிடம் கொடுத்துள்ள தொகுதிகளின் விருப்பப் பட்டியல் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
வட மாவட்ட தொகுதிகள்
வன்னியர் சமூக வாக்குகளையே நம்பியிருக்கும் பாமக வட மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் களம் காணலாம் என நினைக்கின்றனர். இந்த 23 தொகுதிகளிலும் சில தென் மாவட்ட தொகுதிகளை அதிமுக தலைமை ஒதுக்கிவிடக்கூடாது என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் டூ கடலூர்
வட மாவட்டங்களான திருவள்ளூரில் உள்ள சில முக்கிய தொகுதிகளில் ஆரம்பித்து தருமபுரி, கடலூர், சேலம் மாவட்டங்களில் உள்ள தங்களுக்கு சாதகமான தொகுதிகளை லிஸ்ட் போட்டு கொடுத்துள்ளதாம் பாமக.
முக்கிய தொகுதிகள்
கும்மிடிப்பூண்டி, திருத்தணி, எழும்பூர், செங்கல்பட்டு, திருப்போரூர், சோளிங்கர், ஆற்காடு, ஓசூர், செஞ்சி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, ஆரணி, கலசபாக்கம், அணைக்கட்டு, விக்கிரவாண்டி, சங்கராபுரம், மேட்டூர், சேலம் மேற்கு, குன்னம், ஜெயங்கொண்டம், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய வன்னியர் சமூக வாக்குகள் அதிகமாக உள்ள தொகுதிகளை கேட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
தட்டிக்கழிக்குமா?
பாமகவிற்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கியதன் மூலம் பாஜக, தேமுதிகவிற்கும் தலா 20 தொகுதிகளுக்குள் முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறது அதிமுக. இதில் பாமக கொடுத்துள்ள பல தொகுதிகளில் தேமுதிகவும் போட்டியிட விரும்புகிறது. இதில் எந்த தொகுதிகளை யாருக்கு ஒதுக்கும், யாரை தட்டிக்கழிக்கப் போகிறது அதிமுக என்பது சில நாட்களில் தெரிந்து விடும்.