ஆட்சி அதிகாரம் அவர்களிடம் தானே இருக்கிறது.. அப்புறம் ஏன் பயம்.. டிடிவி தினகரன் கேள்வி
சென்னை: 2வது முறையாக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆட்சி அதிகாரம் அவர்களிடம் தானே இருக்கிறது அப்புறம் ஏன் பயம் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தற்கொலைப் படையாக மாறுவோம் என்று அமமுகவினர் பேட்டி அளித்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து டிடிவி தினகரன் பேசுகையில், ஏதோ உணர்ச்சி வசத்தில் பேட்டிக் கொடுத்துள்ளார்கள்.
தொண்டர்கள் உடனே குண்டை கட்டிக்கொண்டா குதிப்பார்கள். சசிகலா நான்கு ஆண்டுகள் கழித்து சிறையில்இருந்து வெளியே வந்துள்ளார். அவரை பார்க்க இயற்கையாகவே கன்னியாகுமரியில்இருந்து திருத்தணி வரை உள்ள தொண்டர்கள் வருவார்கள். ஏற்பாடு என்று இதில் எதுவும் இல்லை. எங்கள் நிர்வாகிகள் அதனை ஒழுங்குபடுத்துவார்கள்.
இரண்டு முறை புகார்
எங்களுக்கு சசிகலாவை வரவேற்கும் எண்ணத்தை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை. ஏன் அவர்கள் பயப்படுகிறார்கள். ஆட்சி அதிகாரமே அவர்களிடம் தான் உள்ளது. அப்புறம் ஏன் டிஜிபியிடம் போய் இரண்டு முறை புகார் அளிக்கிறார்கள். என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது தரம் தாழ்ந்துவிட்டார்களே என்ற வருத்தம்தான் வருகிறது
நடுநிலையாக செயல்படுவார்கள்
ஆனால் ஒன்று, இவர்களிடம் ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்க சதி திட்டம் உள்ளதோ என்று ஐயப்பாடு உள்ளது. இந்த ஐயப்பாடு எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே உள்ளது. இந்த ஆட்சி மற்றும் அதிகாரம் எல்லாம் ஒரு மாதத்திற்கு தான். அடுத்து தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் டிஜிபி உள்பட அதிகாரிகள் அனைவரும் நடுநிலையாக செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் அமமுக தொண்டர்கள் சசிகலாவை வரவேற்பார்கள்.
சொல்ல முடியாது
வாட்ஸ்அப்பில் வரும் ஜெயக்குமாரின் பேச்சுக்களை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. பெங்களூரு முதல் சென்னை வரும்ரை அமமுகவினர் கட்டுப்பாட்டுடன் வந்து செல்வார்கள். அமமுகவினர் அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்ல முடியாது.
அடுத்த என்ன முடிவு
அம்மா, அண்ணா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்கு சென்று சசிகலா அஞ்சலி செலுத்த இருந்தார். ஆனால் முன்கூட்டியே தெரிந்த அவர்கள், நினைவிடத்தை பூட்டிவிட்டார்கள். எனவே நாங்கள் சென்னைக்கு வந்த பின்னரே என்ன செய்ய வேண்டும் என்று அடுத்தக்கட்டமாக முடிவு செய்வோம் என்றார்.