திலீபனின் 32-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் - உலகத் தமிழர்கள் அஞ்சலி
Recommended Video
சென்னை: தமிழீழ விடுதலைக்காக சொட்டு நீரும் அருந்தாமல் 12 நாட்கள் பட்டினி கிடந்து உயிர்நீத்த திலீபனின் 32-வது நினைவுநாள் நிகழ்ச்சிகள் உலகத் தமிழர்களால் இன்று நடத்தப்பட்டு வருகின்றன .
இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவர் திலீபன். 1987-ம் ஆண்டு ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து இந்தியா-இலங்கை இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
அப்போது விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான திலீபன் 5 கோரிக்கைகளை முன்வைத்து சொட்டு நீரும் அருந்தாமல் 1987-ம் ஆண்டு செப்டம்பர் 15-ல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். திலீபன் முன் வைத்த 5 கோரிக்கைகள்:
1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 2). சிறைக் கூடங்களிலும் இராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். 3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். 4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். 5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். இவைதான் திலீபன் முன்வைத்த கோரிக்கைகள்.
ஆனால் இந்த கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதனால் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார் திலீபன். சொட்டு நீரும் அருந்தாமல் போராடிய திலீபன் 1987-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி உயிர்நீத்தார். அவரது மரணம் ஈழ விடுதலைப் போரில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திலீபனின் 32-வது நினைவேந்தல் நிகழ்வுகள் உலகத் தமிழர்களால் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் உள்ள திலீபன் நினைவுத் தூபி முன்னர் பெருந்திரளாக தமிழர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
திலீபன் நினைவேந்தல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமது ட்விட்டர் பதிவில், ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன். உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன். ஈகைப் பேரொளி அண்ணன் திலீபனுக்கு வீரவணக்கம்! தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்தியவன் அண்ணன் திலீபன். எந்த உயரிய நோக்கத்திற்காக எந்தப் புனிதக் கனவிற்காக, தன்னுயிரைத் தந்தாரோ? அந்தக் கனவை நனவாக்குவோம் என்கிற உறுதியை நாம் ஏற்போம்! என பதிவிட்டுள்ளார்.
தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்தியவன் அண்ணன் திலீபன்.
— சீமான் (@SeemanOfficial) September 25, 2019
எந்த உயரிய நோக்கத்திற்காக எந்தப் புனிதக் கனவிற்காக, தன்னுயிரைத் தந்தாரோ? அந்தக் கனவை நனவாக்குவோம் என்கிற உறுதியை நாம் ஏற்போம்!
நாம் தமிழர்! pic.twitter.com/sGZpSNFict
ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன்.
— சீமான் (@SeemanOfficial) September 25, 2019
உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன்.
ஈகைப் பேரொளி அண்ணன் திலீபனுக்கு வீரவணக்கம்! pic.twitter.com/m84ZHtEtOi
விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தமிழீழ விடுதலைப்போராளி திலீபன் நினைவுநாள் இன்று. 5 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து சாகும் வரை உண்ணாநிலையை மேற்கொண்டார். 12 நாட்களும் சொட்டு நீரின்றி சாவை தின்று இன்னும் நம்மோடு வாழ்ந்து வருகின்ற மகத்தான போராளி திலீபன் என பதிவிட்டுள்ளார். மதிமுக தலைமையகமான தாயகத்தில் இன்று மாலையில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதேபோல் பல்வேறு நாடுகளில் திலீபன் நினைவுநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.