திடீர் திருப்பம்.. பாஜக, காங். மாற்றாக உருவாகிறதா மூன்றாவது அணி? சந்திரசேகர ராவ் அதிரடி மூவ்
சென்னை: பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தனது முயற்சியின் ஒரு பகுதியாக, வரும் 13ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் அனைத்து கட்ட வாக்குப்பதிவும் ஏற்கனவே, நிறைவடைந்துவிட்டது.
எனவே, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் சந்திரசேகரராவ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் கூட்டணிக்கும், பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான இடங்கள் கிடைக்காவிட்டால், அப்போது ஆட்சி அமைப்பதில் மூன்றாவது அணி முக்கிய பங்குவகிக்கும் என்பதுதான் சந்திரசேகரராவ் முயற்சிக்கு முக்கிய காரணம்.
சந்திரசேகர ராவ் மகளும் நிஜாமாபாத் லோக்சபா உறுப்பினருமான கவிதா இது தொடர்பாக கூறுகையில், காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைக்காத பிராந்திய கட்சிகள் சுமார் 120 தொகுதிகளில் வெல்லக்கூடும், என்று கருதுகிறோம். எனவே, ஆட்சி அமைப்பதில் மூன்றாவது அணி முக்கிய பங்கு வகிக்கப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை, சந்திரசேகர ராவ் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதையடுத்து கர்நாடக முதல்வர் குமாரசாமி உடன், சந்திரசேகரராவ் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், விரைவில் அவரை பெங்களூருவில் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோன்று, திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, மே 13ஆம் தேதி சென்னையில் சந்திரசேகரராவ் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி ஆதரவளிக்கும் சூழ்நிலை இருந்தால், அப்போது மூன்றாவது அணியின், ஒருவர் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், மூன்றாவது அணி அமைக்கும், முயற்சி மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.