3-வது அணிக்கான கதவை இழுத்து மூடினார் மு.க.ஸ்டாலின்!
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் தேசிய அளவில் 3-வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் 3-வது அணிக்கான கதவை திமுக இழுத்துமூடிவிட்டது என்பத உறுதியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம்தான் ஏற்படும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலக் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகின்றன. இதற்கான ஒருங்கிணைப்பை மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி மேற்கொண்டு வருகிறார்.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைப்போம் என பாஜக கூறி வருகிறது. அதே நேரத்தில் இம்முறை தங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதை பாஜக உணர்ந்தே உள்ளது. இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சந்திரசேகராவ் முயற்சி
அத்துடன் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைவதைத் தடுக்கும் வகையில் 3-வது அணியை உருவாக்கும் முயற்சியிலும் பாஜக இறங்கியுள்ளது. பாஜகவின் முகமாக சந்திரசேகர ராவ் இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பு
இதன் ஒரு பகுதியாக சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரசேகர ராவ் நேற்று சந்தித்தது தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மட்டுமே திமுக தலைமை அறிவித்தது. அத்துடன் இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் எந்த ஒரு செய்தியாளர் சந்திப்பும் நடத்தப்படவில்லை.
காங்கிரஸ் அணிக்கு வர அழைப்பு
3-வது அணிக்கு வருமாறு சந்திரசேகராவ் விடுத்த அழைத்த நிராகரித்த ஸ்டாலின், காங்கிரஸ் அணியில் இணையவே அவரிடம் வலியுறுத்தினார் என அறிவாலய வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன. இருப்பினும் 3-வது அணியில் திமுக இணையக் கூடும் என்கிற தகவல்களும் ஊடகங்களால் வெளியிடப்பட்டன.
ஸ்டாலின் பேட்டி
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தேசிய அளவில் 3-வது அணி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.
ஸ்டாலின் திட்டவட்டம்
சந்திரசேகராவுடனான சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது மட்டுமே. 3-வது அணியை உருவாக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு சந்திரசேகர ராவ் வரவில்லை என்றார். இதனையடுத்து 3-வது அணிக்கான கதவுகளை திமுக இழுத்து மூடிவிட்டது என்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.