திருக்குறள் மாநாட்டில் காரசார பேச்சு.. தி.க.வுக்கு குறி வைக்கும் டெல்லி!
Recommended Video
சென்னை: திராவிடர் கழகத்துக்கு விரைவில் பல்வேறு சோதனைகள் வரவுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
தேர்தல் அரசியலில் எங்களுக்கு நாட்டமில்லை என்று கெத்தாக கூறினாலும், தேர்தல் அரசியல் ஒன்றையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கு மிக முழுமையாக தோள் கொடுப்பதுதான் திராவிடர் கழகத்தின் வேலை. பெரியாரின் தத்துவங்களில் சில முரண்பாடுகளும் உண்டு. ஆனால் கி.வீரமணியோ முரண்பாடுகளை மட்டுமே தத்துவமாக வைத்திருக்கிறார்.
கருணாநிதியின் பேரனான துரை தயாநிதியே அவலமாக சித்தரிக்குமளவுக்கு கி.வீரமணியின் தி.மு.க. சார்புத்தன்மை இருப்பது சரியல்ல என்று திராவிட கழகத்துக்குள்ளேயே கடும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் இதையெல்லாம் என்றைக்குமே கண்டுகொண்டதில்லை வீரமணி. விமர்சனங்களுக்கு அஞ்சுபவராக இருந்திருந்தால் பெரியார் மணியம்மை அறக்கட்டளையின் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தன் மகன் அன்புராஜிடம் கொடுத்திருக்க மாட்டார். தேர்தலில் போட்டியிடாத அரசியல்வாதி அவ்வளவேதான் வீரமணி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
மாநாட்டு உரை
சரி அது கிடக்கட்டும், இப்போது பிரச்னை என்ன தெரியுமா? கடந்த 13-ம் தேதியன்று சென்னை காமராஜர் அரங்கில் ‘திருக்குறள் மாநாடு' என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை நடத்தினார் கி.வீரமணி. இதில் வைகோ, திருமாவளவன், சத்யராஜ், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லாஹ் போன்றோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் பா.ஜ.க. மீது மிக மிக கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கின்றனர் பேச்சாளர்கள். இந்த தேசமே பா.ஜ.க.வை ஆதரித்தாலும், எந்தக் கால கட்டத்திலும் தமிழகத்தில் அக்கட்சியை காலூன்ற விடவே கூடாது! என்று சபதம் போட்டுப் பேசியிருக்கின்றனர்.
டெல்லி ஆய்வு
இதன் ஒலி மற்றும் ஒளி நாடாவை அப்படியே டெல்லிக்கு பார்சல் செய்திருக்கிறது உளவுத்துறை. உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு அலுவலர்கள் அதை மிக முழுமையாக பார்த்துவிட்டு அமைச்சர் அமித்ஷாவிடம் சில தகவல்களை ரிப்போர்ட் செய்திருக்கின்றனர். விளைவு, அது அவருக்கடுத்த அதிகார லாபிகளுக்குள் ஒரு ரவுண்டு வந்தது. அதன் பிறகு வருமான வரித்துறை மிக முழுமையாக அலர்ட் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் விபரமறிந்தோர்.
ரெய்டுகள் வரலாம்
கி.வீரமணி பெரியார் கொள்கைகளையும், நாத்திக தத்துவங்களையும் ஊருக்குதான் உபதேசம் செய்வார், ஆனால் தனது பர்சனல் வாழ்விலும், குடும்ப உறவுகள் மத்தியிலும் எந்த தங்கு தடையையும் போதிக்க மாட்டார் என்று ஒரு விமர்சனம் உண்டு. இதை திரை கிழித்து, வெளிச்சம் போட்டுக் காட்டும் பொருட்டே கி.வீரமணி மீதான வருமான வரித்துறை நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள்.
குவிந்திருக்கும் சொத்துக்கள்
ஐ.டி.க்கும், அரசியலுக்கும் என்ன லிங்க்? என்று கேட்டால்....அழுக்கு லுங்கிகளும், தேய்ந்த கைத்தடியையும் வைத்துக் கொண்டுதான் பெரியார் காலத்தைக் கழித்தார். ஆனால் பெரியார் மணியம்மை அறக்கட்டளைக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் சில ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. இதை நிர்வகிக்கும் அதிகாரத்தை தன் மகனுக்கு கி.வீரமணி எழுதிக் கொடுத்தபோது திராவிடர் கழகத்தினுள் பஞ்சாயத்து வெடித்தது. நிர்வாக முறைகேடுகள் தொடர்பான புகார்கள் வருமான வரித்துறைக்கு ரகசியமாக வந்தது. அவை இப்போது முழுக்க தூசி தட்டி கண்காணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி குறி
அந்த சொத்துக்களின் வளர்ச்சி, அது பயன்படுத்தப்பட்ட முறை, அச்சொத்துக்களை அனுபவிப்பதற்கான அதிகார வரம்பு, அவற்றுக்கு உரிய வரி செலுத்தப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் அலசப்பட்டுள்ளது. கூடிய விரைவில் பெரியார் மணியம்மை அறக்கட்டளை வளாகத்தினுள் ஐ.டி.துறையினரின் கார்களை பார்க்கலாம் என்கிறார்கள். இது போக மிக செல்வச் செழிப்பாக செட்டிலாகி இருக்கிற கிறித்துவ அமைப்புகளின் முக்கிய புள்ளிகள் சிலரையும் ஐ.டி.யின் ரெய்டு டார்க்கெட் செய்துள்ளது என்கிறார்கள்.
திமுகவுக்கு வைக்கும் குறி
ஆனால் வீரமணியை குறி வைப்பதெல்லாம் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை முடக்க, மடக்கத்தான் என்கிறார்கள். ஏனென்றால் ‘நாத்திகம், பெரியாரிஸம்!' எனும் பெயர்களில் வீரமணி டீம் சுற்றிச் சுழன்று தி.மு.க.வுக்காக ஒரு பெரும் வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருப்பதை உடைக்கத்தான் இந்த பிளானாம். மேலும் சட்டசபைத் தேர்தல் நெருங்க நெருங்க பரபரப்புகளுக்கு பஞ்சமே இருக்காதுன்னு சொல்கிறார்கள்.
- ஜி.தாமிரா