கண்ணுக்கு விருந்தளிக்கும் திருக்குறுங்குடி.. காதர் மஸ்தானின் கண்களின் வழியே.. அழகோவியமாக!
சென்னை: ஒரு சிற்பத்தைப் பார்க்கிறோம்.. ஓவியத்தைப் பார்க்கிறோம்.. ரசிக்கிறோம்.. பலர் அத்தோடு போய் விடுவார்கள்.. சிலர் மனதுக்குள் வாங்கிக் கொண்டு லயித்துக் கிடப்பார்கள்.. காதர் மஸ்தான் அதிலிருந்து சற்று மாறுபட்டு வேறுபட்டுள்ளார்.
திருக்குறுங்குடி தெரியுமா... கலைப் பொக்கிஷத்தை தனக்குள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்கும் ஒரு அருமையான சிற்றூர். நெல்லையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து அதே 45 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள அழகிய ஊர்.
எங்கு திரும்பினாலும் பச்சை பசேல்தான். வயலும், தோப்புமாக ஊரே ஜொலிக்கிறது.. இப்படி ஒரு சொர்க்க பூமியா என்று பார்ப்பவர்கள் மெய் சிலிர்ப்பார்கள்.. கொடுமுடியாறு அணையின் அரவணைப்பில் உள்ள இந்த ஊரில் விவசாயம்தன் உயிர் நாடி.
அழகிய நம்பிராயர் கோவில் சிற்பங்கள்
இந்த ஊருக்குள்தான் நடு நாயகமாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது அழகிய நம்பிராயர் கோவில். தமிழர் கடட்டக் கலைக்கு இது ஒரு அருமையான உதாரணம்.. இதை கோவில் என்று மட்டும் கூறி விட முடியாது.. அதையும் தாண்டி அட்டகாசமான கலைப் பொக்கிஷமாகும்.
கற்களால் ஆன கோவில்
கோவில் முழுக்க கல்தூண்கள்தான். முழுக்க முழுக்க கல்லால் ஆன கோவில் என்பதால் கோவிலுக்குள் போய் விட்டாலே ஏசி போட்ட மாதிரி ஜில்லென்று இருக்கும். சுற்றிப் பார்க்கப் பார்க்க ஆஹா.. என்ன ஒரு கலை காவியம் என்று ஒவ்வொரு சிற்பமும் நம்மை வியக்க வைக்கிறது.
கலைப் பொக்கிஷம்
மதம், ஆன்மீகம் இதையெல்லாம் தாண்டி இந்த கோவில் நமக்கு உணர்த்துவது காலத்தையும் கடந்து நிற்கும் அந்த கலைதான். இங்குள்ள சிற்பங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. இதை எப்படி உருவாக்கினார்கள்.. எத்தனை காலம் பிடித்தது என்று அடுக்கடுக்காக ஆச்சரியங்கள்தான் வந்து போகின்றன.
தமிழர்களின் பிரமாண்டம்
பாகுபலி கிராபிக்ஸ் பார்த்து வாய் பிளந்த தலைமுறை நம்முடையது. ஆனால் நமக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த ஆதி பரம்பரையினர் இந்த கலைப் பொக்கிஷத்தை அதை விட பல மடங்கு பிரமாண்டமாக உருவாக்கி நமக்கு கொடுத்து விட்டுப் போயுள்ளனர்.
2000 ஆண்டு பழமையானது
இந்தக் கோவிலின் வயது 2000 ஆண்டுகளுக்குப் பின்னால் போகிறது. இத்தனை ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கூட கோவில் கம்பீரமாக காட்சி தருகிறது.
மறக்க முடியாத கலை
நிற்க.. இப்படி காலத்தால் மறக்க முடியாத, மறைந்து போகாத இந்த கலைப்பொக்கிஷத்தை தனது அருமையான கேமரா கண்களால் படம் பிடித்துக் கொண்டு வந்துள்ளார் நெல்லை மாவட்டம் ஏருவாடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் காதர் மஸ்தான்.
காதர் மஸ்தானின் கண்களில்
ஒவ்வொரு சிற்பத்தையும் அத்தை தத்ரூபமாக, உயிரோவியமாக மாற்றி அற்புத விருந்து படைத்துள்ளார் காதர் மஸ்தான். புகைப்படங்களை தொகுத்து அதை அழகான புத்தகமாக வெளியிட்டுள்ள ஒரு கலைப்படைப்பாகவும் மாற்றியுள்ளார். நீங்களும் கண்டு மகிழுங்கள்.