இப்போது நடப்பது வாக்கு வங்கி அரசியல்.. தன்னிறைவு பெறும் வரை.. நெளிவு சுளிவு அவசியம்.. திருமாவளவன்
சீமானுக்கு திருமாவளவன் அட்வைஸ் தந்துள்ளார்
சென்னை: "தமிழக அளவில் திமுகவையும் அதிமுகவையும் தூக்கியெறியும் சக்தியை நாம் பெற்றிருக்கிறோமா? நாம் சனாதனத்துக்கு எதிராக நிற்கப் போகிறோமா, அல்லது அம்பேத்கரியம் மற்றும் பெரியாரியத்திற்கு எதிராக நிற்கப் போகிறோமா? நாம் வாக்கு வங்கி அரசியலில் தன்னிறைவு பெறும் வரை நெளிவு சுளிவுகளோடுதான் அரசியல் உத்திகளை வகுக்க வேண்டும்" என்று திருமாவளவன் சீமானுக்கு சூசகமாக அட்வைஸ் தந்தார்.. ஆனால் இதற்கு சீமான் தன் பாணியிலேயே பதிலடி தந்திருக்கிறார்.
திருமாவளவனுக்கும், சீமானுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், தமிழ் மொழி.. தமிழர்கள்.. தமிழ் இனம்.. தமிழ் தேசியம்.. இவைகளை குறித்து அதிகம் பேசுபவர்கள்.. இதை பற்றி நிறைய சிந்திப்பவர்கள்.
ஆனால், தனித்தனி பாதையையும், அந்த பாதைக்கான கோட்பாடுகளையும் வகுத்து கொண்டு செல்பவர்கள்.. சீமான் தனித்து களம் காண்பவர்.. திருமாவளவன் கூட்டணி வைத்து போட்டியிடுபவர்!
கோட்பாடுகள்
இந்த சமயத்தில்தான் சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது.. இருவருமே அதில் பங்கேற்றனர்.. அப்போது திருமாவளவன் பேசியபோது, "கோட்பாட்டில் நமக்குள் வேறுபாடு எதுவும் இல்லை.. அதை அடைவதற்கு செல்லும் வழியில் மாற்று கருத்துகள் இருக்கலாம். அதேபோல, தமிழர் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதில் இருவரும் ஒரே கருத்தில் உள்ளோம். ஆனால், வாக்கு வங்கி அரசியலில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? தமிழக அளவில் திமுக, அதிமுகவை தூக்கியெறியும் சக்தியுடன் இருக்கிறோமா?
தமிழ் தேசியம்
ஏனென்றால், தமிழ் தேசியத்திற்கு எதிராக சனாதனம் உள்ளது.. இது தேசிய அளவில் வலிமையையும் பெற்றுள்ளது.. இதற்கு எதிராக நாம் நிற்க போகிறோமா அல்லது அம்பேத்கரியம், பெரியாரியத்திற்கு எதிராக நிற்க போகிறோமா? தேசிய அளவில் ஜனநாயக சக்தியுடன் காங்கிரசும், சனாதன சக்தியுடன் பாஜகவும் உள்ளன.. எத்தனையோ முரண்கள் இருந்தாலும், காங்கிரஸால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்ற தெளிவு நமக்கு முதலில் வேண்டும். வாக்கு வங்கியில் வலிமை பெறும் வரை நெளிவு சுளிவுகளோடு தான் அரசியல் உத்திகளையும் வகுக்க வேண்டும். இப்படி பலல விஷயங்களில் நமக்குள் கருத்து வேற்றுமை உள்ளது" என்றார்.
ஜனநாயக சக்திகள்
அதாவது இந்திய அளவில் வலிமை பெற்றிருக்கும் சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும் என்று திருமாவளவன் மறைமுகமாக சீமானுக்கு தெரிவித்தார். இதையடுத்து சீமான் தன்னுடைய பதில் வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது, "தமிழ் தேசியம் போற்றும் எந்த அரசியல் கட்சி தலைவர்களோடும் நான் இல்லை. யாருடனும் நான் கை கோர்க்கவில்லை. ஆனால், அனைவருடனும் தொடர்பில்தான் இருக்கிறேன். தேர்தல் அரசியல் என்று வரும்போது, எல்லோரும் எந்த கூட்டணியில் அதிக இடங்கள் கொடுக்கிறார்களோ அதை நோக்கி ஓடுகிறார்கள்... என்னுடன் யாருமே நிற்பதில்லை.
போராடுவேன்
எனக்கும் தெரியும்.. வெறும் 4 விழுக்காடு வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விட முடியாது என்று... ஆனாலும் 15, 20 விழுக்காடு வாக்கு விழுக்காடு வரும் வரை நான் தனியாகத்தான் போராட வேண்டியிருக்கிறது. ஏன் ஒன்றாக சேர்ந்து வேலை செய்வதில்லை என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள்.
உறுதிப்பிடிப்பு
இங்கிருக்கும் தலைவர்களை ஒன்றிணைப்பது எனது வேலை அல்ல. ஆனால், தமிழர்களை என்னால் ஒன்றிணைக்க முடியும். அதேபோல, இங்குள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதும் என் பணி அல்ல. ஆனால், தமிழ் இளைய சமூகத்தை ஒன்றிணைக்க முடியும்" என்றார். திருமா - சீமானுக்குள் கருத்து வேறுபாடு இருப்பது இதன்மூலம் தெரியவந்தாலும், இருவரும் அவரவர் கொள்கை, கோட்பாடுகளில் மிகவும் உறுதிப்பிடிப்புடனேயே இருக்கிறார்கள் என்பது இந்த பேச்சுக்களின் மூலம் நிரூபணமாகி உள்ளது!