ராஜீவ் கொலை- சர்வதேச சதியில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதே பிரபாகரன் நிலைப்பாடு: திருமாவளவன்
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை என்பது சர்வதேச சதி என்பதும் அச்சதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்பதும்தான் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாடு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவாளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எந்த இடத்திலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ராஜிவ்காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என்று ஒப்புக்கொண்டதில்லை. அதே போல் மாவீரர் நாள் உரையில் எந்த இடத்திலும் இந்திய அரசை பற்றியோ அல்லது காங்கிரஸ் கட்சியைப் பற்றியோ அண்ணன் பிரபாகரன் விமர்சித்ததில்லை.
ராஜீவ் கொலையில் சர்வதேச சதி உள்ளது என பலரும் கூறியிருக்கின்றார்கள். அந்த சதியில் விடுதலைப்புலிகள் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். இதுதான் விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்களின் கருத்து, அண்ணன் பிரபாகரனின் கருத்து. இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு மற்றும் அரசியல் கோட்பாட்டிற்கு எதிரான கருத்தை சொல்வது ஈழத்தமிழர் மீது பற்று பாசத்தை வெளிப்படுத்துவதாக அமையாது.
இந்திய அமைதிப்படை மீது அனைவருக்கும் ஒரு அதிருப்தி உண்டு. அமைதிப்படையை அனுப்ப வேண்டும் என்று சொன்னது தமிழக மக்கள். ஈழ மக்களுக்கு பிறகு அதன் மீது கடுமையான அதிருப்தி உண்டானது. IPKFஐ எதிர்த்து முதலில் பலியான போராளி மாலதி. களத்தில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் மோதிக்கொண்டாலும் யுத்தம் செய்தாலும் எதிரிகளாக இருந்தாலும் இந்திய அமைதிப்படையை எதிர்த்தது முன்னாள் இலங்கை பிரதமர் பிரேமதாசவும் தான், இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் இணைந்து இந்திய அமைதிப்படையை எதிர்த்தனர்.
பிரேமதேசா இந்திய அமைதிப்படையை எதிர்க்க புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார் என்ற கூற்றும் உள்ளது. அன்று இந்திய அமைதிப்படையின் மீது சிங்கள் அரசுக்கும் கோபம் இருந்தது, தமிழர்களுக்கும் கோபம் இருந்தது, தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் கோபம் இருந்தது. இந்திய அமைதிப்படையை வரவேற்கமாட்டேன் என அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த வகையில் சீமான் அவர்களின் கோபம் அதோடு பொருந்தக்கூடியது தான், சரி தான். ஆனாலும், விடுதலைப்புலிகள் தொடர்பான அரசியல் நிலைபாட்டு கருத்துக்களை தெரிவிப்பது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் கவனமாக இருக்க வேண்டும். அதற்குத் தான் மாவீரர் நாள் உரைகள் சான்றாக இருக்கின்றன.
2009 வரையில் கூட அவ்வுளவு முரண்கள் இருந்த காலகட்டத்தில் கூட இந்திய அரசுக்கு எதிரான கருத்தை அண்ணன் பிரபாகரன் எங்கேயும் சொல்லவில்லை. அவர் கோபத்தை சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராகத் தான் கட்டமைத்துக்கொண்டார் ஒரு போதும் இந்திய அரசிற்க்கு எதிராக செயல்படவில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.