கொரோனா தடுப்பூசி போட்ட பின் விவேக் சுயநினைவு இழந்தாரா? அரசு தெளிவுபடுத்த திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டதற்கு பின்னர்தான் நடிகர் விவேக் சுயநினைவை இழந்தாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2-ம் கட்ட பரவல் அதிகரித்துள்ளது. அதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் போட்டுக் கொண்டார். அத்துடன் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டியதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரமும் செய்தார்.
இந்த நிலையில் நடிகர் விவேக் நேற்று திடீரென சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 4.35 மணிக்கு விவேக் நம்மை விட்டு பிரிந்தார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவேக் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது.
தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி. இவ்வாறு திருமாளவன் பதிவிட்டுள்ளார்.