தீவிரமடையும் குடியுரிமை சட்டத்துக்கான எதிர்ப்பு.. சென்னை வேளச்சேரியில் கோலமிட்ட திருமாவளவன்
சென்னை: குடியுரிமை சட்டத்துக்கான எதிர்ப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை வேளச்சேரியில் தனது கட்சி அலுவலகத்தில் திருமாவளவன் கோலமிட்டுள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. சில் போராட்டங்களில் வன்முறையும் எழுந்தது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடியுரிமை சட்டத்திற்காக போராடி வருகின்றனர்.
கோலம்
நேற்று முன் தினம் திடீரென சென்னை பெசன்ட் நகரில் சில வீடுகளின் முன் வேண்டாம் என்ஆர்சி, வேண்டாம் சிஏஏ என பெண்கள் கோலமிட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்ப்பு கோலம்
இந்த நிலையில் கோலம் போட்ட 6 பெண்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும், தற்போதைய தலைவர் முக ஸ்டாலினின் இல்லத்திலும் கனிமொழியின் சிஐடி காலனி இல்லத்திலும் "வேண்டாம் சிஏஏ என்ஆர்சி" என கோலம் போடப்பட்டது.
திருமாவளவன்
இதையடுத்து சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக மகளிரணி சார்பில் கோலம் போடப்பட்டது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேளச்சேரியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நோ சிஏஏ, நோ என்ஆர்சி என தெரிவித்துள்ளார். திமுக மற்றும் தோழமை கட்சிகளின் பேரணியிலும் திருமா கலந்து கொண்டார்.
நாளை கோலப் போட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டிலும் இது போன்ற எதிர்ப்பு கோலம் போடப்பட்டது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை காட்டும் நிலையில் பாஜகவோ குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நாளை கோலமிடுகின்றனர்.