ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்?.. திருமாவளவன் விளக்கம்!
சென்னை: தமிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்த விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி சஞ்சீப் பானர்ஜி அவருக்கு பிரமாணம் செய்து வைத்தார்,
சுமார் 500 பிரமுகர்கள் மட்டுமே விழாவுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
ஆளுநர் பதவியேற்பு.. உள்நோக்கம் இருப்பதாக கூறி வராமல் போன காங்கிரஸ்.. புறக்கணித்த இடதுசாரிகள்
ஆர்.என்.ரவி
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் இறையன்பு. அமைச்சர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். பதவியேற்ற முதல் நாளே மரபினை தாண்டி செய்தியாளர்களை சந்தித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ''பழம்பெருமை கொண்ட தமிழ்நாட்டில் பணியாற்றுவது பெருமை அளிக்கிறது. என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்வேன்; என்னால் இயன்ற அளவு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன்'' என்று கூறினார்.
காங்கிரஸ் , வி.சி.க பங்கேற்கவில்லை
ஆளுநர் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் யாருமே பங்கேற்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரிகளும் பங்கேற்கவில்லை. ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போது காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ' முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.
கே.எஸ்.அழகிரி கண்டனம்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். உதாரணத்துக்கு, முன்னாள் காவல் துறை அதிகாரியான கிரண்பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்து நகைத்தது. அந்த வகையில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்திருப்பது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்வதற்கா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது'' என்று கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார்.
திருமாவளவன்
இந்த நிலையில் ஆளுநர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர், 'ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், இந்த ஆளுநரை நியமித்ததில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. இந்த ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்த நிலையில் அந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் விழாவில் கலந்துகொள்ளவில்லை'' என்று தெரிவித்தார்.