திருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மத்தியமைச்சராக கூடிய அனைத்து தகுதிகளும் உள்ளதாக திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்த போது பொன்பரப்பியில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாஜகவிடம் இருந்து அப்பாவி இந்துக்களையும், பாமகவிடம் இருந்து அப்பாவி வன்னியர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.
மேலும், பாஜக, பாமக இரு கட்சிகளும் அதிகாரத்திற்காக ஜனநாயகத்தை நசுக்கவும் செய்வார்கள் என கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க-வின் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார், சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், சிபிஐ-யின் முத்தரசன், ஆசிரியர் கி.வீரமணி, சுப.வீரப்பாண்டியன், கரு.பழனியப்பன், எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
பவர்ஃபுல் ஃபனி.. சென்னை அருகே கரையை கடந்தால் சூப்பர்.. ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், மத்திய அமைச்சராக அனைத்து தகுதிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு உள்ளதாக புகழாரம் சூட்டினார்.
மேலும், திருமாவளவன் தலித் மக்களுக்கான தலைவர் மட்டும் அல்ல அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவர்களுள் திருமாவளவனும் ஒருவர் என்றும் கரு.பழனியப்பன் தெரிவித்தார். நான் அரசியலில் இருப்பது தான் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிரச்சனை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் உருக்கமாக பேசியதற்கு, கரு.பழனியப்பன் இவ்வாறு கூறியுள்ளார்.