ரஜினிகாந்த் பாஜகவின் முகம்.. அச்சுறுத்தல் காரணமாக கட்சி தொடங்கி இருக்கிறார்.. திருமாவளவன் பகீர்!
சென்னை: ரஜினிகாந்த் பாஜகவின் முகம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி விமர்சித்துள்ளார்.
பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் போன்ற சனாதன சக்திகளின் நெருக்கடியால் தான் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளதாகவும் திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார்.
டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு. காஞ்சிபுரம் நகர் ஓரிக்கையில் அம்பேத்கரின் திருஉருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருமாவளவன்
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு பாஜகவின் அறிவுசார் பிரிவினைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த் நியமித்துள்ளார்,
அச்சுறுத்தல்
உடல் நலம் சரியில்லை என்று சொன்ன ரஜினி காந்த். திடீரென அரசியல் கட்சி தொடங்கியிருப்பது அச்சுறுத்தல் காரணமாக எடுத்த முடிவாகவே இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் போன்ற சனாதன சக்திகளின் நெருக்கடியால் தான் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். அதற்கான தேதியும் தெரிவித்திருக்கிறார். எனவே அவர் பாரதிய ஜனதா கட்சியின் மற்றொரு முகமாக இருப்பார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
பாரத் பந்த்
உலக அளவிலும், இந்தியாவே அதிரும் வகையில் தொடர்ந்து 10 நாள்களாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். ஒரு பெரிய யுகப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வரும் 8 ஆம் தேதி பாரத் பந்த் நடைபெறுகிறது. இந்த பந்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.
கல்வி வளர்ச்சி
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 10 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சிகளில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை 60 சதவீதமாக இருந்தது 10 சதவீதமாக குறைந்து இருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை பெருமளவு பாதிக்கும்" இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.