வீடுகளை அகற்றப் போவதாக வந்த தகவல்.. விரைந்து வந்த திருமாவளவன்.. முதல்வரிடம் கொண்டு செல்வதாக உறுதி
சென்னை : தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் நீர்நிலை ஆக்கிரமித்து சுமார் 400 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் நேரில் ஆய்வு செய்தார். பட்டா வழங்கி இங்கேயே குடியிருக்க ஆவணம் செய்ய தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தார்.
Recommended Video
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஏரி, முன்பு நீர்ப்பாசன ஏரியாக இருந்தது. 219 ஏக்கர் ஆயக்கட்டு பரப்பைக் கொண்ட இந்த ஏரி, பின்னர் நகர்ப்புற ஏரியாக மாறிவிட்டது.
பாமகவின் இலக்கு 5 மாவட்டங்கள்... 3 நாள் மட்டுமே பரப்புரை பயணம்... களத்தில் இறங்கும் அன்புமணி..!
இந்நிலையில் சிட்லபாக்கம் ஏரியில் அப்பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது, தாம்பரம் நகராட்சியின் கழிவுநீர் கொட்டப்படுவது, ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பது ஆகியவை குறித்தும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நீர்நிலைகள் பாதுகாப்பு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் பாதுகாப்பது, சட்டவிரோதக் கட்டுமானங்களை தடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிட்லபாக்கம் ஏரி
சிட்லபாக்கம் ஏரியை பொறுத்தவரை அங்குள்ள விதிமீறல் மற்றும் அனுமதியின்றி கட்டபட்டுள்ள கட்டிடங்களை விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அப்பணிகள் முடிந்ததும் அறிக்கை அளிக்கவுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கபட்டது.
3 நாளில் வருகிறது
இதனையடுத்து, சிட்லப்பாக்கம் ஏரியின் புலப்படம், ஏரியைச் சுற்றியுள்ள கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகள், அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
திருமாவளவன் ஆய்வு
இதனிடையே சென்னை சிட்லபாக்கம் ஏரி நீர் நிலைகளை ஆக்கிரமித்து சுமார் 400 வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். சில கட்டிடங்கள் அப்பகுதியில் இடிக்கவும் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் சிட்லபாக்கம் குடியிருப்பு மக்களை விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் குறித்து கேடறிந்தார். ஆக்கிரமிப்பு இடங்களையும் பார்வையிட்டார்.
50 வருடம்
குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் , " இங்குள்ள மக்கள் சாதாரண வேலை செய்யக்கூடிய ஏழை மக்கள், அவர்களை வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கி குடியிருப்புகளை இடிக்க உள்ளதாக கூறியதால் பீதியில் ஆழ்ந்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை இந்த இடத்திலேயே இருக்கும் வகையில் தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், கருணை உள்ளத்தோடு பட்டா வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இப்பிரச்சினையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.