சட்டுன்னு இப்படி பேசிட்டாரே.. சங்கடத்தில் திமுக.. ஆனால் திருமா தெளிவா இருக்காரே!
திருமாவளவன் பேசிய மனுதர்மம் பேச்சு சர்ச்சையை கிளப்பி வருகிறது
சென்னை: திருமாவளவன் சட்டென இப்படி பேசிவிட்டாரே, அது திமுகவுக்கு தர்மசங்கடத்தை தருமா? என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஆனால் திருமாவளவன் இதில் மிகத் தெளிவாக இருக்கிறார்.. தான் குறிப்பிட்டது மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ளதையே என்று அவர் தெளிவாக விளக்கியுள்ளார். ஆனால் திமுகவின் பெயரை இதில் பாஜகவினர் இழுத்து விட்டுள்ளனர்.
"மனுதர்மம் இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள்" என்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். பெண்களை விபச்சாரிகளாக மனுதர்மம் சித்தரிக்கிறது, அதை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டத்திலும் விசிக குதித்துள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் திருமாவுக்கு ஆதரவு கரங்கள் தொடர்ந்து நீட்டப்பட்டும் வருகின்றன.
ஆனால், "பெண்களை" திருமாவளவன் விபச்சாரிகள் என பேசிவிட்டதாக மொத்தமாக வேறு ரூட்டில் அதைக் கொண்டு போய் விட்டனர் பாஜகவினரும், பிற இந்து மத ஆதரவாளர்களும். குறிப்பாக பாஜக இதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டது.
இதுக்கும் திமுகதானா.. "தூண்டி விடாமல் சரக்கு மிடுக்கு பேச வாய்ப்பில்லை".. எச். ராஜா சொல்கிறார்!
விமர்சனங்கள்
2 தினங்களாக திருமாவளவனின் இந்த பேச்சுதான் கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இது இரு வேறு விமர்சனங்களையும் தாங்கியபடியே வலம் வந்து வருகிறது. ஏன் சமீபத்தில் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய நடிகை குஷ்பு கூட இந்த விவகாரத்தில் பெண்களை இழிவுபடுத்தி விட்டார் திருமாவளவன். இதை திமுக கண்டிக்காதா, காங்கிரஸ் கண்டிக்காதா என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
திமுக கூட்டணி
திருமாவின் இந்த பேச்சு திமுக கூட்டணிக்கு பாதகமானதாக பார்க்கப்படுகிறது, மற்றொன்று திமுக சொல்லாமல் திருமா இப்படி பேச வாய்ப்பில்லை என்றும் சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.. கூட்டணியில் உள்ளதாலேயே, பிற கட்சிகளின் கொள்கைகளை தங்கள் கட்சிகளும் ஏற்று நடக்க வேண்டும் என்பது இயல்பு இல்லைதான்.. அந்த வகையில், திமுக, விசிக, காங்கிரஸ், மதிமுக கட்சிகள் கொள்கை ரீதியாக பலமாகவே இருந்து வருகின்றன.
தர்மசங்கடம்
அந்த வகையில்தான் திருமாவின் இந்த பேச்சு, திமுகவுக்கு சில தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் பேச்சு சரியோ, தவறோ.. ஏன் இந்த தேவையில்லாத விவாதம்.. இதைத் தவிர்த்திருக்கலாமே என்றுதான் திமுகவினர் கருதுகின்றனர். உதயசூரியன் சின்னத்தில்தான் கூட்டணி கட்சிகள் பெருமளவு போட்டியிட வேண்டும் என்ற யோசனையில் திமுக உள்ளது.. சென்ற முறையே சின்னம் கிடைக்காமல், உதயசூரியனில் நின்று, விசிக, மதிமுக தனித்துவத்தை இழந்துவிட்டதாக அக்கட்சி தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர்.. இப்போதும் அதேபோல உதயசூரியன் சின்னம் என்பதால், திருமாவளவனே இப்படி ஒரு யுக்தியை பயன்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்துக்கள்
அதாவது, தங்கள் சின்னத்தில் நிற்க கூடாதென்ற, திமுகவிற்கு திருமாவளவன் வைத்த "செக்" காகத்தான் இதை பார்க்க வேண்டி உள்ளது.. திருமாவளவன் கருத்தை ஆமோதித்தால், தங்கள் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்துக்கள் என்று சொன்ன ஸ்டாலின், இந்துக்களின் எதிர்ப்பை கடுமையாக சம்பாதிக்க வேண்டும். இந்த கருத்தை எதிர்த்தால் நாத்திகர்களின், திராவிடர்களின், குறிப்பாக சிறுபான்மையினரின் எதிப்பை சம்பாதிக்க வேண்டி வரும்.. எனவே, முக ஸ்டாலினால் துரைமுருகன் மூலமாக பட்ட அவமானமாத்திற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் திருமாவளவன் என்று இந்த பேச்சின் போக்கு ஒருவிதமாக செல்கிறது.
ஆதரவு?
ஆனால், இதனை பாஜக தரப்பு ஏற்கவில்லை.. திமுக,காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிப்பவர்கள் திருமாவளவன் பேசியதை ஆதரிக்கிறார்களா? இந்த மாதிரி வேறு ஒரு பாஜக தலைவர் சிறுபான்மையின பெண்கள் குறித்து பேசியிருந்தால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இப்படித்தான் அமைதி காப்பார்களா? இது நிச்சயம் திமுகவின் வேலையாகத்தான் இருக்கும்" என்று கொந்தளிக்கிறது.
ஏமாற்றுதல்
எனினும் பெரும்பாலானோர் இந்த விவகாரத்தை அவ்வளவாக ரசிக்கவே இல்லை என்றுதான் தெரிகிறது.. இதுவரை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணம் மதங்களை தூண்டிவிடுதலும், ஜாதி பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுதலுமாக இருக்கும் நிலையில், மறுபடியும் இதுபோன்ற துவேஷங்களை ஏன் இப்போது கிளப்ப வேண்டும் என்பதே பலரது கேள்வி.
ஆர்ப்பாட்டம்
அதுமட்டுமல்ல, எப்போது முடிந்துபோன மனுதர்மத்தை ஏன் இப்போது கிண்டி எடுக்க வேண்டும்? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, இதை பற்றி ஏன் பேச வேண்டும்? தமிழ்நாட்டில் 90 சதவீதம் தாழ்த்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர்களை எந்த உரிமையும் படு கேவலமாக நடத்தும்போது, அதை ஏன் யாருமே கேட்க முன்வரவில்லை? ஏன் ஒருவரும் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை?
ஆதாயம்
தேர்தல் காலத்தில் இப்படி பேசுவது அரசியல் ஆதாயமாகவே கருதப்பட்டாலும் சரி, இந்திய கிராமங்கள் முழுக்க விரவிக்கிடக்கும் சாதிய கட்டமைப்புகளும், கிராமத்தின் பாகுபாடும், பெண்ணடிமைத்தனங்களும், உணவு கட்டுப்பாடுகளும் இன்னும் அப்படியேதான் நடைமுறையில் உள்ளன.. இந்திய அணி கிரிக்கெட்டில் விளையாடுபர்கள் யார்? என்ற கேள்வியை நமக்கு கேட்க தோன்றுகிறது.
விளையாட்டு
தமிழ்நாட்டிலேயேகூட, ஒருகுறிப்பிட்ட இனத்தவரை தவிர மற்றவர்கள் விளையாடுவதே பெரும் சவாலாக இருப்பதே இதற்கு நிகழ்கால சாட்சி... அதனால் திருமா பேசியது சரியா, தவறா என்பதைவிட, இப்போதைக்கு இது தேவையா? என்ற கலக்கம்தான் சூழ்ந்துள்ளது.. எப்படி பார்த்தாலும் திருமாவின் பேச்சு திமுகவுக்கு தர்மசங்கடத்தையே தரும் என்றே தெரிகிறது!