திருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு
திருமாவளவனுக்கு எதிராகவே நாங்கள் போராடுகிறோம் என்று குஷ்பு பேசியிருக்கிறார். தனக்கு எதிராக திருமாளவன் போராட்டம் நடத்தியதற்கு 15 ஆண்டுகள் காத்திருந்து பழிக்கு பழி வாங்கியிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகி
சென்னை: அண்ணன் திருமாவளவனுக்கு எதிராகவே எங்களுடைய போராட்டம் என்று சொன்ன குஷ்பு, பெண்களை அவமரியாதை செய்பவர்கள் பக்கத்தில் கடவுள் இருக்கமாட்டார் பெண்களை மதிக்கும் இடத்தில்தான் கடவுள் இருப்பார் என்றும் சொன்னார். திருமாவளவனுக்கு எதிராக குஷ்பு இத்தனை ஆக்ரோஷம் காட்டுகிறாரே என்று யோசித்தால் கிட்டத்தட்ட 15 ஆண்டுகால பிளாஷ்பேக் பற்றி பேசுகிறார்கள். குஷ்புவின் கற்பு கருத்துக்கு விசிகவின் திருமாவளவன் போராட்டம் நடத்தியதற்கு எதிர்வினையாற்றவே குஷ்பு இந்த போராட்டத்தை நடத்தியாக கூறுகின்றனர். தன்னை நீதிமன்ற படியேற வைத்த திருமாவளவனை காத்திருந்து பழிவாங்கி விட்டதாகவே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் எனத் திரைப்பட நடிகை குஷ்பு, இந்தியாடுடே (தமிழ்) வார இதழில் சொல்லி வெளியான கருத்துகள், ""கற்பு" மற்றும் பாலியல் ஒழுக்கம் தொடர்பாக வாத பிரதிவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது.
இந்தியாடுடே வாசகர்களோடு முடிந்து போயிருக்க வேண்டிய இந்தக் கருத்தை, கருணாநிதி குடும்பத்தினரால் வெளியிடப்படும் தமிழ் முரசு இதழ், தனது வியாபார அரசியல் நோக்கத்திற்காக, ""தமிழ்ப் பெண்கள் கற்பு இல்லாதவர்களா?" எனும் தலைப்பில் பரபரப்பூட்டும் செய்தியாக மாற்றியது.
இதையடுத்து, தினத்தந்தி கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பேட்டியளித்த குஷ்பு, ""திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாத ஆண்பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?" என்று கேட்டார்.
இதையடுத்து, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொதித்தெழுந்தனர். தமிழ் பெண்களை குஷ்பு அவமானப்படுத்தி விட்டதாகக் குற்றஞ் சுமத்தி, அவருக்கு எதிராகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, அவருக்கு எதிராக கிரிமினல் வழக்குகளும் தொடுத்தனர்.
இந்த பரபரப்புக்கு நடுவே குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றிருந்த குஷ்பு தனது பயணத்தை பாதியில் விட்டு விட்டுசென்னைக்குத் திரும்பினார். கண்ணீர் பேட்டி கொடுத்த குஷ்பு, என்னை வாழ வைத்த தமிழ் மக்களோடு ஒருவராக ஒன்றி, தமிழ்ப்பெண்ணாகத்தான் நான் வாழ்ந்து வருகிறேன்.
தமிழர்களின் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரத்தை நான் நன்கு அறிவேன். தமிழ்ப் பெண்களுக்கு மாசு கற்பிக்க நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தமிழ்ப் படங்களில் கூட அப்படிப்பட்ட வேடங்களில்நான் நடித்ததில்லை. இந்தியா டுடே நடத்திய சர்வேயின் முடிவுகளின் அடிப்படையில் அதுகுறித்து நான் வேதனையுடன்தெரிவித்த கருத்துக்கள் அப் பத்திரிக்கையில் தவறாக வந்து விட்டது.
என்று சொன்னார்.
மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சுப்பையா-எய்ம்ஸ் குறித்த குஷ்பு கருத்துக்கு காத்திருக்கும் மக்கள்
தமிழ்ப் பெண்கள்மீதும், மக்கள் மீதும், கலாச்சாரம் மீதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தமிழ்ப் பெண்களின் மனதைப் புண்படுத்தும்படி நான் பேசியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கண்ணீர் விட்டார் குஷ்பு.
இதே போலத்தான் கடந்த வாரத்தில் மனுவில் பெண்கள் பற்றி இவ்வாறு எல்லாம் இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது' என்று திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேச, அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு, திருமாவளவன் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்' என்று பரபரப்பாக பேசப்பட்டது.
பாஜக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் குஷ்பு, பெண்களை மோசமாகச் சொல்வதுதான் உங்கள் கொள்கையா?' என்று கேட்டார். அதோடு நிற்காமல் குஷ்பு தலைமையில் பா.ஜ.க மகளிர் அணியினர் திருமாவளவனின் எம்பி தொகுதியான சிதம்பரத்தில் தர்ணா போராட்டம் நடத்தச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தை பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதைக் கண்டித்தே நடத்தவிருந்தோம் என்று தெரிவித்தார்.
இறுதி மூச்சுவரை பெண்களின் கண்ணியத்துக்காகப் போராடுவோம்' என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ள குஷ்பு, ஒவ்வொரு பெண்ணுக்காகவும் நடத்தப்படும் போராட்டம் இது என்றும் பதிவிட்டார்.
2005ஆம் ஆண்டு தனது கற்பு கருத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய திருமாவளவனை 15 ஆண்டுகள் காத்திருந்து அவரது கருத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்கிறார் குஷ்பு. இந்த போராட்டமும் அவரது பேட்டிகளும் பாஜகவில் பரபரப்பாகவும் சமூக ஊடகங்களில் வைரலாகியும் வருகிறது.