எடுத்த எடுப்பிலேயே திமுகவுக்கு அதிமுக 20 இடங்களை விட்டுக்கொடுத்திருச்சு.. திருமாவளவன்
சென்னை: திமுகவுக்கு அதிமுக 20 இடங்களை விட்டுக்கொடுத்துள்ளது என பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட 20 இடங்களை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்- திருமாவளவன்,
Recommended Video
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கட்சி மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது
நாடாளுமன்ற தேர்தலின் போது 2 எம்பி தொகுதிகளை பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு குறைந்தபட்சம் 10 தொகுதிகளியில் போட்டியிட விரும்பியது. ஆனால் திமுக இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு மிகமிக குறைவான தொகுதிகளையே விட்டுக்கொடுக்க முன்வந்ததால் வேறு வழியின்றி கட்சிகள் ஏற்றுக்கொண்டன.
சமாதானம்
இன்னமும் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் குறைவான தொகுதி ஒதுக்கீடு காரணமாக வருத்தததில் உள்ளன. அவர்களை திமுக தலைமை உள்ளாட்சி தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என சமாதானம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
தொகுதிகள் எவை எவை
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கி உள்ளது. ஓரிரு நாளில் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பது அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பின்னடைவு அல்ல
இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரிரு நாளில தொகுதிகள் பட்டியலை அறிவிப்போம். பின்னடைவு என்றோ, அல்லது சிறுமைப்படுத்திவிட்டார்கள் என்றோ வருத்தப்படவில்லை. கூடுதலாக தொகுதிகள் கிடைத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்போம். ஆனாலும் இது வெறும் 6 தொகுதிகள் அல்ல.. 6 சட்டமன்ற தொகுதிகள் ஆகும்.
அதிமுக
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடுகின்ற தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. எடுத்த எடுப்பிலேயே 20 தொகுதிகளை திமுக கூட்டணிக்கு அதிமுக விட்டுக்கொடுத்துள்ளது" இவ்வாறு திருமாவளவன் கூறினார்.