பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் -திருமாவளவன்
சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது என விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு- பா.ஜ.க.அரசின் கூண்டுக்கிளியாகி தோற்றது சி.பி.ஐ.: ஸ்டாலின், கமல் விளாசல்
சிறப்பு நீதிமன்றம்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. இதற்கு சிபிஐ இந்த வழக்கை உரிய ஈடுபாட்டுடன் நடத்தவில்லை என்பதே காரணம். எனவே, மத்திய அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
குற்றவாளிகள்
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர்-08 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம் என்பதை உறுதி செய்திருந்தது. எனவே, அந்தக் குற்றத்தை இழைத்த குற்றவாளிகள் அதற்காக சதித் திட்டத்தைத் தீட்டியவர்கள் அனைவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. தங்களுக்கு எதிரானது என்று கருதினாலும்கூட, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய தரப்பினரும் பாபர் மசூதி இடித்த வழக்கில் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ஆனால், அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மாறாக இந்தத் தீர்ப்பு அமைந்திருப்பது அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது.
ஏவல் அமைப்பு
சிபிஐ என்பது சுதந்திரமாக இயங்குகிற ஒரு புலனாய்வு அமைப்பு அல்ல; அது மத்திய அரசின் ஏவல் அமைப்பாக மாற்றப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக இந்த வழக்கில் சிபிஐ நடந்து கொண்டிருக்கிறது.
திருமா வேதனை
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் இருந்து கரசேவகர்கள் அயோத்தியில் கூட வேண்டும்; அங்கே இருக்கின்ற பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக செங்கற்களை எடுத்து வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு அன்றைய பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ஆதரவு திரட்டியதை அனைவரும் அறிவோம். அதுபோலவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே பாபர் மசூதியை இடிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தார்கள் என்பதற்கு ஊடகங்களிலேயே ஏராளமான மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படியிருந்தும் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்கள் நம்பத்தக்கனவாக இல்லை என சிறப்பு நீதிமன்றம் கூறியிருப்பது வியப்பளிக்கிறது.
நல்லிணக்கம்
நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்தால் மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மீதான நம்புக்கையையும் இழந்துவிடுவார்கள். அது நாட்டின் நல்லிணக்கமான சூழலுக்குப் பேராபத்தாக மாறிவிடும். எனவே, இதை உணர்ந்து மத்திய அரசு இவ்வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.