முதல்வரை தீர்மானிக்கும் சக்தி வி.சி.க... திமுகவை சீண்டும் திருமாவளவன்
சென்னை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக யார் வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நாங்கள் தான், என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
திருச்சியில் நேற்று நடைபெற்ற தேசம் காப்போம் மாநாட்டில் பேசிய திருமாவளவன், திமுகவுக்கு மறைமுகமாக நிறைய மெசேஜ்களை சொல்லியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெறுமனே கோஷம் போடும் கட்சியாக மட்டும் இனி எந்த கட்சியும் நினைக்க வேண்டாம் என்றும், கோட்டையில் கொடியேற்றும் கட்சியாக மாறி வருவதாகவும் பேசி திருமா அதிர வைத்துள்ளார்.
தேசம் காப்போம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து தேசம் காப்போம் என்ற பெயரில் நேற்று திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. அதில் பேசிய திருமாவளவன், திமுகவுக்கு குட்டு வைக்கும் வகையில் சில வார்த்தைகளை விட்டார். அதாவது விடுதலை சிறுத்தைகள் ஆதரவில்லாமல் ஸ்டாலின் முதல்வராக வர முடியாது என்கிற பொருள்படும் வகையில் அவரது கருத்து அமைந்திருந்தது. இதி திமுக தரப்பை கடுமையாக கோபம் கொள்ளச்செய்துள்ளது.
முதல்வருடன் சந்திப்பு
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு வென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது வரை அதே கூட்டணியில் தான் இருந்துவருகிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருமாவளவன் சந்தித்து பேசியது திமுகவுக்கு சற்றும் பிடிக்கவில்லை. அதன் எதிரொலியாக டிசம்பர் மாதம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் பேசிய சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன், நம்முடன் கூட்டணி வைத்துக்கொண்டு முதல்வரை சந்தித்து சிலர் பேசிகிறார்களா, அவர்களை கழற்றி விட வேண்டும் கூறியிருந்தார்.
கோபம்
ஆனால் அப்போது தனது கோபத்தை வெளிக்காட்டாமல் மனதிற்குள் வைத்து வந்த விசிக தலைவர் திருமாவளவன் நேற்று திருச்சியில் தனது உள்ளகுமுறலை கொட்டி தீர்த்தார். தமிழக முதல்வராக யார் வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நாங்கள் தான் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவின்றி யாரும் முதல்வராக வர முடியாது எனவும் தெரிவித்துள்ளார். திருமா தனது பேச்சில் வெளிப்படையாக திமுகவை சுட்டிக்காட்டாவிட்டாலும் கூட, இது மு.க.ஸ்டாலினுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் திருமா கூறியுள்ள மறைமுக மெசேஜ் எனக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
பதிலடி
மேலும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்துக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்தார். தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதியானது யார் போட்ட பிச்சையும் இல்லை என்றும், அம்பேத்கர் வடித்த சட்டத்தால் தான் எனவும் தெரிவித்தார். திமுக மீதான திருமாவின் பாய்ச்சலுக்கு ஆர்.எஸ்.பாரதி உதிர்த்த சில வார்த்தைகள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே துரைமுருகன் காங்கிரஸை சீண்டியுள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதி விடுதலை சிறுத்தைகளை சீண்டியுள்ளார்.