திமுகவுக்கு செக்.. ரஜினிக்கு ஒரு விளாசல்.. ஆர்எஸ். பாரதிக்கு ஒரு சுளீர்.. திருமா ஏன் அப்படி பேசினார்
திருமாவளவன் பேச்சு பெரும் பரபரப்பை தந்து வருகிறது
சென்னை: கடுமையான களப்பணியாலும்... அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையிலும் விடுதலை சிறுத்தை கட்சி அரசியலை முன்னெடுத்து வருகிறது.. நேற்று திருமாவளவன் பேசிய பேச்சுதான் இன்றைய அரசியல் கள நிலவரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்படியாக அடித்தளமாக அமைந்து வருகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் நேற்று தேசம் காப்போம் பேரணி நடந்தது.. திருமாவளவன் இந்த மாநாட்டில் பேசினார்.. அவரது பேச்சில் மொத்தம் 3 விஷயங்கள் கவனிக்கத்தக்கதாக உள்ளன.
முதலாவதாக, ரஜினியை சீண்டியது.. "70 வயது வரை அரிதாரம் பூசி நடித்தவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வர நினைக்கும் போது, ஏன் விசிக ஆட்சிக்கு வரக்கூடாது" என்றார். ரஜினிகாந்த்துடன் நல்ல நட்பிலும், இணக்கத்திலும் உள்ளவர் திருமாவளவன்.
ஆர்எஸ்எஸ் அறிக்கையும் திமுக தலைவர் அறிக்கையும் ஒரே மாதிரி இருக்கு.. எடுத்து பாருங்க.. சீமான் தாக்கு
வெற்றிடம்
2 வருடத்துக்கு முன்பு 'வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி' என்று ரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டபோதே அதை வரவேற்ற முக்கிய அரசியல் புள்ளிகளில் திருமாவளவனும் ஒருவர்... ரஜினியின் இந்த அறிவிப்பு அப்போது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியபோதே, "கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்பும் ஆற்றல் ரஜினிக்கு உள்ளது" என்று சொன்ன திருமாவளவன் இப்போது, எதிர்மறையாக பேசி உள்ளதன் காரணம் என்ன என்று தெரியவில்லை.. ஆனால் இதன்மூலம் ஒன்றுமட்டும் புரிகிறது.. ரஜினிகாந்த் புது கட்சி ஆரம்பித்தால் விசிக அதனுடன் கூட்டணி வைக்காது என்பது தெளிவு!
நிலைப்பாடு
இரண்டாவது விஷயம், விசிகவின் உறுதியான நிலைப்பாடு திருமாவளவன் பேச்சில் விளங்கி கொள்ள முடிந்தது.. பெரும்பாலும் கூட்டணி வைத்தே போட்டியிடும் கட்சிதான் விசிக.. சாதி கட்சி என்ற முத்திரை ஒரு பக்கமும், பாமகவுக்கு டஃப் கொடுக்கும் கட்சி என்ற பெயரையும் தாங்கி வந்து கொண்டிருக்கிறது.. உண்மையில் பாமக, விசிக இல்லையென்றால், திராவிட கட்சிகளின் வெற்றி என்பது சந்தேகம்தான்! அந்த வகையில் விசிகவின் பங்கு சமீபகாலமாக அதிகமாகவே தென்படுகிறது.
வாக்கு சதவீதம்
நாம்கூட 2 நாளைக்கு முன்பு ஒரு கருத்து கணிப்பு வாசகர்களிடம் நடத்தினோம்.. விசிக யாருடன் கூட்டணி வைத்தால் நல்லது என்று கேட்டிருந்தோம்.. "பாமகவுடன் இணையலாம்" என்பதற்கு 12.5 சதவிதம் பேரும், தனித்து நிற்க வேண்டும் என்று 12.5 சதவீதம் பேரும், சரிசம வாக்களித்திருந்தனர். இது விசிகவின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவே இருந்தது.
திராவிடர் கட்சி
"70 வயது வரை அரிதாரம் பூசி, எல்லாத்தையும் அனுபவித்து அதிகாரத்தில் அமர நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 ஆண்டுக்காலம் மக்களுக்காக உழைத்த விசிக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது" என்று சுட்டிகாட்டியது ரஜினிகாந்த்தைதான் என்றாலும், திருமாவளவனின் இந்த வார்த்தை திராவிட கட்சிகள் மிகவும் கவனிக்கத்தக்கதே.
கோட்டை
"கூலிக்கு மாரடிக்கும் கும்பலாகவும், கோஷம் போடும் கும்பலாகவும் விசிகவினர் இருப்பார்கள் என்று கனவு காண வேண்டாம். ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம், முதல்வரைத் தீர்மானிக்கும் சக்தியும், இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியும் விசிகவுக்கு இருக்கிறது" "ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது" என்ற கேள்வி கூட்டணியை அசைத்து பார்ப்பதாக உள்ளது.. இனி விசிக கூட்டணி யாருடனாவது அமைக்குமா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
பதிலடி
இறுதியாக, ஆர்எஸ் பாரதிக்கு திருமாவளவன் தந்த பதிலடி யாருமே எதிர்பாராதது... ஆர்எஸ் பாரதி அன்று பிராமணர்கள் குறித்தும் பேசியது பெரிய சர்ச்சையானபோது, எல்லாருமே கண்டனம் தெரிவித்திருந்தனர்.. "இடஒதுக்கீடு என்பது தலித்துக்கு திமுக போட்ட பிச்சை. நாங்கள் போட்ட பிச்சையால்தான் அவர்கள் முன்னேறினார்கள்" என்று ஆர்எஸ் பாரதி பேசியதற்கு கூட்டணியில் உள்ள திருமாவளவன் மட்டும் ஏன் எதுவுமே பேசவில்லை, ஏன் கருத்து எதுவும் சொல்லாமல் இருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பினர்.
பிச்சையல்ல
இதைதான் மக்கள் நீதி மய்யமும் கேட்டிருந்தது.. "திமுக கூட்டணியில் உள்ள விசிக கூட இதை பற்றி பேசவில்லை.. எம்பி திருமாவளவன் கூட இதை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. திமுக, விசிக ஆகியோரின் முகத்தை தமிழக மக்கள் மொத்தமாக தெரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கெல்லாம் சேர்த்து வைத்துதான் திருமாவளவன் நேற்று பதில் சொன்னார்.. "தாழ்த்தப்பட்டோர் நீதிபதியானது யாரும் போட்ட பிச்சையல்ல. அது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமை.." என்று பதிலடி தந்தார்.
காரமான பதில்
ஆர்எஸ் பாரதி தன் பேச்சுக்கு பகிரங்கமான மன்னிப்பு கேட்கவில்லை.. ஆனால் வருத்தம் மட்டுமே கேட்டிருந்த நிலையில்.. திருமாவளவனின் இந்த பதிலடி சற்று காரமாகவே இருக்கிறது.. மாநாட்டில் திருமா பேசிய இந்த 3 விஷயங்கள்தான் தமிழகத்தில் அனல் பறக்க பரவி வருகிறது.. இதனால் வரும் சட்டசபை தேர்தலில் விசிகவின் நிலைப்பாடு என்ன? கூட்டணி யாருடன் இருக்கும்? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பினை... திருச்சியில் திருமா ஏற்படுத்தி விட்டு போயுள்ளார்!