கணபதி பாப்பா மோரியா.. 11 அங்குல உயரத்தில் கியூட்டான நர்த்தன விநாயகர் சிலை.. சந்தன மரத்தில் கைவண்ணம்
சென்னை: விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி 11 அங்குல உயரத்தில் சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர் சிலையை திருமழிசையைச் சேர்ந்த விருது பெற்ற சிற்பக் கலைஞர் டி.கே. பரணி உருவாக்கியுள்ளார்.
நாடு முழுவதும் வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் இந்த முறை விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போல் சாலைகளில் விநாயகர் சிலைகள் வைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருமழிசையை சேர்ந்த மர சிற்பக் கலைஞர் டி.கே. பரணி (51) விநாயகர் சதுர்த்திக்காக சிறிய அளவிலான விநாயகர் சிலையை சந்தன மரத்தில் உருவாக்கியுள்ளார்.
7 அங்குல அகலம்
இந்த சிலை 11 அங்குல உயரம், 7 அங்குல அகலம், 3 அங்குல தடிமனில் வெகு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. தாமரை மலரை யானை தாங்கி நிற்க அதன்மேல் நின்று விநாயகர் நடனமாடுவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையைச் சுற்றி விநாயகரின் வாகனமான எலிகள் இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைப்பது போன்று சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதி அற்புதம்
நுண்ணிய, அதி அற்புதமான வேலைப்பாடுகளுடன் சிலை எழிலுற அமைந்துள்ளது. இந்த சிலையை உருவாக்க சிற்பி டி.கே.பரணிக்கு 3 மாதங்கள் ஆகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் திருமழியைச் சேர்ந்த டி.கே.பரணி, நுண்ணிய சிற்பத்தை உருவாக்கியதற்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதைப் பெற்றவர்.
தேசிய விருது
அதுமட்டுமல்லாமல் மாநில அரசின் விருதுகள், விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட்டின் விருதுகள், கிராப்ட்ஸ் எம்போரியத்தின் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் சந்தன மரத்தில் 13.5 செ.மீ. உயரம் மற்றும் 9 செ.மீ. அகலத்தில் காஞ்சிபுரம் அத்திவரதர் சிலையை கடந்த ஆண்டு செய்திருந்தார். இந்த சிலையை 25 நாட்களில் உருவாக்கியிருந்தார்.
அதிபர்
டெல்லியில் உள்ள தாஜ் கசானா என்ற கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இவரது கைவினை பொருட்களில் ஒன்றான ராதே கிருஷ்ணா சிலை அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா இந்தியா வருகையின் போது அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது. இவர் ஏற்கெனவே அரை அரிசி முதல் 4 அரிசி வரை திருவள்ளுவர், விவேகானந்தர், மகாத்மா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்டோரின் சிற்பங்களை உருவாக்கியுள்ளார். இவர் ஒற்றை அரிசியில் சிலை, சந்தன மரங்களில் நுண்வேலைப்பாடுகளுடன் சிலைகள் செய்து வருகிறார்.
மானியம்
இதுகுறித்து பரணி தமிழ் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் இது போன்று சந்தன மரத்தில் சிலைகளை செதுக்க இவருக்கு ஆண்டுக்கு 5 கிலோ சந்தன மரம் தேவைப்படுமாம். இத்தனை ஆண்டுகளாக தேனாம்பேட்டையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அரசு மானியத்தில் எங்களை போன்ற தொழிலாளிகளுக்கு வழங்கி வந்தது. ஆனால் தற்போது சந்தன மரங்களை வழங்குவது தடை செய்யப்பட்டுவிட்டதால் எங்கள் தொழில் வெகுவாக பாதிக்கிறது. இப்போது வரை என் தந்தை வாங்கி வைத்திருந்த மரங்களை கொண்டு செய்து வருவதாக பரணி தெரிவித்துள்ளார். மேலும் மற்ற மாநிலங்களை போல் சந்தன மரங்களை எங்களுக்கு மானியத்தில் தர அரசு முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சுத்தமான சுவாசம்.. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்..வெட்டிவேர் மாஸ்குகளை வீட்டில் தயாரிப்பது எப்படி?