"திரு திரு"ன்னு விழிக்க தேவையில்லை.. இருக்கவே இருக்காங்க டிடிவி, ரஜினி.. தில்லா இருக்கலாம் அரசர்!
திருநாவுக்கரசரின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும்?
Recommended Video
சென்னை: அளவுக்கு அதிகமாக தன்மீது தானே நம்பிக்கை வைத்து கொள்வதும், கொள்கை பிடிப்பு கொஞ்சமும் இல்லையென்றால் தூக்கி எறியப்படுவதற்கும் மிக சரியான உதாரணம்தான் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் பதவி மாதிரிதான் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியும். தலைவராக ஒருவரைப் போடுவார்கள். திடீரென அவரைத் தூக்கி எறிவார்கள். அது மூப்பனாராக இருந்தாலும் சரி, வாழப்பாடி ராமமூர்த்தியாக இருந்தாலும் சரி.. யாராக இருந்தாலும் சரி.. பாரபட்சமே இருக்காது. காரணம்தான் கடைசி வரை தெரியவே தெரியாது.
திருநாவுக்கரசருக்கும் இப்போது அதுவே நடந்திருக்கிறது (நாளை கே.எஸ்.அழகிரிக்கும் அதுவே நடக்கும்). அரசியலின் மூத்த தலைவர்.. எம்ஜிஆரின் ஆட்சியில் துணை சபாநாயகர், வீட்டு வசதித்துறை அமைச்சர் என தன்னை நிலைநிறுத்தி கொண்டவர். 28 வயதிலேயே அறந்தாங்கி தொகுதியில் எந்த வீட்டில் நல்லது, கெட்டது என்றாலும் அங்கே திருநாவுக்கரசர் இருப்பார். அந்த அளவுக்கு நெருக்கம், தொகுதி மக்களுடன் இணக்கம்!
ஜெ.,க்கு பக்க பலம்
எம்ஜிஆர் இறந்த பிறகு கட்சி இரண்டாக ஆனபோது, ஜானகி அணியைவிட ஜெ.அணிக்கு பக்கபலமாக இருந்து அவருக்கு வழிகாட்டியவர்களிலும், வெற்றி பெற வைத்தவர்களிலும் ஒருவர்!. இன்று பேசுகிறோமோ கூவத்தூர்.. அந்த கான்செப்ட்டை அன்று ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே இவரும் சாத்தூர் ராமச்சந்திரனும்தான்.
தத்தளித்தார்
ஆனால் ஜெயலலிதா அசுர வளர்ச்சி பெறவும், அவருடன் சரியான ஒத்துழைப்பை திருநாவுக்கரசால் தர முடியவில்லை. காரணம், ஜெயலலிதாவே இவரை ஒதுக்க ஆரம்பித்து விட்டார். ஆண்கள் இல்லாத உலகை நோக்கி அவர் வேகமாக அடி போடத் தொடங்கினார். தனித்து விடப்பட்ட திருநாவுக்கரசர் தனிக் கட்சி கண்டார், தத்தளித்தார். ஒவ்வொரு தேர்தலிலும் ஓரளவுக்கு வெற்றியை பெற்றாலும், முழு பலத்துடன், தவிர்க்க முடியாத நபராக இவரால் வளர முடியவில்லை.
கருணாநிதி, வாஜ்பாய்
ஆனால் இவரால் ஆதரவாளர்கள் வளர்ந்தனர்.. அவர்களுக்காக கட்சியில் தன்னை நிலைநிறுத்த வேண்டிய அவசியத்துக்கும் ஆளானார். கருணாநிதி முதல் வாஜ்பாய் வரை சென்று அமைச்சர் பதவியை கேட்க, இருவருமே தங்களது கட்சியில் சேர அறிவுறுத்தினார்கள். ஆனால் திமுகவைத் தவிர்த்து பாஜகவில் இணைந்து வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தார்.
இணக்கமாக முடியவில்லை
பாஜகவில் உள்ள அனைத்து பலனையும் அனுபவித்தார். ஆனால் அந்த கட்சியிலும் பாஜகவுடன் ஒத்துழையாமை தொடங்கியது. எவ்வளவுதான் பாஜகவை சார்ந்த பேட்டிகள், கருத்துக்களை உதிர்த்தாலும் அந்த கட்சியுடன் அவரால் இணக்கமாகவே முடியவில்லை. அந்த கொள்கையுடன் அவரால் ஒன்றவும் இயலவில்லை.. விளைவு அங்கிருந்து விலகினார். காங்கிரஸுக்கு வந்து சேர்ந்தார்.
பொறுப்பை மறுத்தார்
இங்கு தலைவராக நியமிக்கப்பட்டது முதலே ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் தகராறுதான். இப்படியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி தேசிய செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி ராகுல் கேட்டதாகவும், ஆனால் தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்துதான் மாநில தலைவர் பதவிக்கு வந்ததால், அதனை திருநாவுக்கரசர் மறுத்ததாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
மதிப்பு இன்னமும் உள்ளது
ஆனால் இனி என்ன செய்ய போகிறார் திருநாவுக்கரசர்? அவரை பொறுத்தவரை அனைத்து தலைவர்களிடம் நன்றாக பழக கூடியவர். ரஜினி உட்பட அரசியலையும் தாண்டி பல்வேறு நபர்களுடன் நட்பை வளர்த்து வருபவர். குறிப்பாக, டிடிவி தினகரன் மீது திருநாவுக்கரசுக்கு ஒரு ஈர்ப்பு எப்போதும் இருந்து வருகிறது. ஒருமுறை டிடிவி தினகரன்கூட, திமுகவை வைட்டு விலகினால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என்று சொன்னது கூட திருநாவுக்கரசர் மீதிருந்த மதிப்பால்தான்.
"மய்ய"த்துடன் புரிதல்
அதேபோல, ரஜினியுடன் ஆரம்ப காலத்திலிருந்தே திருநாவுக்கரசர் நல்ல நட்பை கொண்டு வருகிறார். ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் இருக்கிறது. அதேபோல கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கவும் ஏற்கனவே திருநாவுக்கரசர் ஆசைப்பட்டவர்தான்.
கமல், ரஜினி
எனவே ஒரு பக்கம் தினகரனும், மற்றொரு பக்கம் ரஜினி, இன்னொரு பக்கம் கமல் என அவருக்கு நிறைய கதவுகள் திறந்தே கிடக்கின்றன. இவரது அனுபவத்தை யார் சரியாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு.