காங்கிரஸ் கைவிட்டாலும் கவலை இல்லை.. திருநாவுக்கரசருக்காக காத்திருக்கும் ரஜினி, கமல், தினகரன்?
திருநாவுக்கரசரின் அமெரிக்க பயணத்தின் பின்னணி என்ன?
Recommended Video
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அமெரிக்காவுக்கு கிளம்பி போய் உள்ளது நிறைய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை "அவரை" சந்திக்க சென்றிருப்பாரோ என்றும் தெரியவில்லை.
மாநிலத்தில் இருக்கிற கட்சிகளிலேயே எக்கச்சக்க கோஷ்டி சண்டை இருப்பது தமிழக காங்கிரசில்தான். எப்பவுமே கோஷ்டி பூசல், எப்பவுமே தகராறு, எப்பவுமே உட்கட்சி விவகாரம் என நீண்டு கொண்டே இருக்கும். இந்த பிரச்சனையை மட்டும் அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களால் அப்போதிலிருந்தே தீர்க்கப்படாமலேயே உள்ளது.
இப்போதும் சில மாதங்களாகவே பூசல் அதிகரித்தது. இதனால் ஒவ்வொரு கோஷ்டி தலைவர்களும் ஆளாளுக்கு கிளம்பி சென்று தனித்தனியாக ராகுலை பார்த்து குறைகளை சொல்லி, கோரிக்கையையும் கொடுத்து விட்டு வந்தார்கள்.
குஷ்பு
திருநாவுக்கரசு, ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பினர் வெளிப்படையாகவே ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டனர். இதில் ஈவிகேஎஸ் திருநாவுக்கரசரை பற்றி நிறைய புகார்களை டில்லிக் கொண்டு சென்றதாகவும், குஷ்புவை மாநில காங்கிரஸ் தலைவராக்க முயற்சிப்பதாகவும் கூறப்பட்டது.
சந்தேகம் வலுக்கிறது
எப்படி பார்த்தாலும் தமிழக காங்கிரசிலிருந்து புகார்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்ததால், வேறு ஒரு புதிய தலைமையான பீட்டர் அல்போன்சை கொண்டு வர ராகுல் யோசித்ததாகவும் சொல்லப்பட்டது. ஏனென்றால் திருநாவுக்கரசர் பொறுப்புக்கு வரும்போதே பீட்டர் அல்போன்ஸ் பெயரும் அடிபட்டதால் இந்த சந்தேகம் வலுக்க தொடங்கியது.
மீண்டும் குழப்பம்
ஆனால் கடந்த மாதம் சென்னை வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத், மாநில தலைவர் திருநாவுக்கரசரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி விட்டு போனது இன்னும் குழப்பம் அதிகமாகிவிட்டது.
என்ன பேசினார்கள்?
பிறகு சில தினங்களுக்கு முன்பு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது. அதனால் அவர் டெல்லி கிளம்பி சென்று சோனியா, ராகுலை சந்தித்து பேசினார். ஆனால் என்ன பேசினார் என முழுமையாக சொல்லவில்லை.பின்னர் 5 மாநில தேர்தல் முடிவுகள், கருணாநிதி சிலை திறப்பு என்று காங்கிரஸ் தரப்பு பிசியாகிவிட்டது.
நிறைய காரணங்கள்
இப்போது காங்கிரஸ் தலைமை மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதாவது திருநாவுக்கரசர் பதவி பறிக்கப்படும் என்ற பேச்சு அடிபடுகிறது. ஒரு பக்கம் ஈவிகேஎஸ், திருநாவுக்கரசரை பற்றி நிறைய புகார்களை மேலிடத்தில் சொல்லி வந்தாலும், அதைதவிர இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
திருப்தியாக இல்லை
திருநாவுக்கரசர் என்னதான் காங்கிரஸ் தலைவராக இருந்தாலும், அவர் ஏற்கனவே அதிமுக, பாஜக கட்சிகளில் இருந்தவர். குறிப்பாக அதிமுக மேல் அதிக விசுவாசத்துடனே நடந்து கொள்வதாக கூறப்பட்டது. அதனால் திமுக மீது காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக சொல்லப்பட்டது. அதேபோல ஸ்டாலினுக்கும் காங்கிரசோடு கூட்டணி வைப்பதில் உடன்பாடு என்றாலும், மாநில தலைமை மீது அவ்வளவாக திருப்தி இல்லை என பேசப்பட்டது.
டிடிவி தினகரன்
அது மட்டும் இல்லை, டிடிவி தினகரன் மீது திருநாவுக்கரசுக்கு ஒரு ஈர்ப்பு அப்போதிருந்தே இருந்து வருகிறது. ஒருமுறை டிடிவி தினகரன்கூட, திமுகவை வைட்டு விலகினால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என்று சொன்னது கூட திருநாவுக்கரசர் மீதிருந்த மதிப்பால்தான்.
கமல் மீது மரியாதை
மேலும், ரஜினியுடன் ஆரம்ப காலத்திலிருந்தே திருநாவுக்கரசர் நல்ல நட்பை கொண்டு வருகிறார். நிறைய முறை இருவரும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் இருக்கிறது. அதேபோல கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கவும் ஏற்கனவே திருநாவுக்கரசர் ஆசைப்பட்டவர்தான்.
கதவு திறந்துள்ளன
இப்போது காங்கிரஸ் தலைமை மாறும் என்றாலும், திருநாவுக்கரசருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு பக்கம் தினகரனும், மற்றொரு பக்கம் ரஜினி, இன்னொரு பக்கம் கமல் என அவருக்கு நிறைய கதவுகள் திறந்தே கிடக்கிறது. அதனால் அவர் எந்த கட்சிக்கு சென்றாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.