பாஜக - அதிமுக உறவை மறைக்கவே தம்பிதுரை குற்றச்சாட்டு... திருநாவுக்கரசர் விமர்சனம்!
சென்னை : பாரதிய ஜனதா கட்சி, அதிமுக இடையேயான உறவை மறைக்கவே மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை பாஜக மீது குற்றம் சுமத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
திமுக மறைமுகமாக பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பதாக தம்பிதுரை அடிக்கடி கூறுவது மத்திய அரசின் பினாமி அரசாக தமிழக அரசு உள்ளது என்பதை மறைப்பதற்காகவே, பாரதிய ஜனதா- அதிமுக உறவை மறைப்பதற்காக இதுபோல தவறான குற்றச்சாட்டை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். தேவகவுடா, சந்திரபாபு நாயுடு உள்பட ஒவ்வொரு தலைவர்களாக இதனை ஏற்றுக் கொண்டு வருகின்றனர். ராகுல்காந்தியை பிரதமராக திமுக ஏற்கவில்லை என்று தம்பிதுரை சொல்வது தவறு. ஒருபோதும் அப்படி சொல்லவில்லை. உரிய சந்தர்ப்பம் வரும்போது அறிவிப்போம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
சபரிமலையில் முதல்முறை பெண் போலீசார்.. கேரள அரசு அதிரடி முடிவு.. என்ன நடக்கிறது?
திமுக - காங் கூட்டணி அமையும்
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை அகில இந்திய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தலைமை ஏற்கும். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலும் கூட்டணி அமைந்து நாங்கள் இணைந்து தேர்தல் பணியாற்றி வெற்றிபெறுவோம்.
கால நீட்டிப்பு செய்யலாம்
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. தீபாவளி தினமும் கொண்டாடுவதில்லை. தீபாவளி பண்டிகையின் போது அரை மணி நேரம், ஒரு மணி நேரம் ஒதுக்கி அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கும். இதை நம்பி தொழிலாளர்கள் வாழ்கின்றனர். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். காலத்தை நீடிப்பதில் தவறு இல்லை.
இந்தியாவில் அதிக விலை
இந்தியாவில் பெட்ரோல், டீசல் ரூ 35க்குள் விற்கப்பட வேண்டும். இலங்கை, வங்கதேசம் உள்பட பல நாடுகளில் ரூ.35க்கு அதிகமாக விற்கப்படவில்லை. உலகத்தில் அதிகவிலை இந்தியாவில் தான். கடந்த 2 தினங்களாக விலை குறைந்து வருகிறது. எப்போது மீண்டும் திடீரென விலையை உயர்த்த போகிறார்களோ.
போர்க்கால நடவடிக்கை தேவை
தமிழகத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பலர் உயிரிழப்பு ஏற்படுவதை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. மத்திய அரசின் சார்பில் சுகாதார துறை உதவிட வேண்டும். தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உயிர் காக்கும் மருத்துகளை ஆரம்ப சுகாதார மையங்களில் தயாராக வைக்க வேண்டும். மருத்துவ முகாம்ங்களை நடத்த வேண்டும். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பன்றி, டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.