திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. ஜெ. கைரேகை போலி.. போஸ் வெற்றி செல்லாது.. ஹைகோர்ட் அதிரடி
திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் பெற்றி வெற்றி செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Recommended Video
சென்னை: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதாவின் கைரேகை போலி என்றும் கோர்ட் தீர்ப்பின் மூலம் உறுதியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு ஒரு வழியாக முடிவிற்கு வந்து இருக்கிறது. பல மாதங்களாக இங்கு இடைத்தேர்தலை நிறுத்தி வைத்திருந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை போட்டதாக கூறப்பட்டது.
ஜெயலலிதா அனுமதி
இது ஜெயலலிதா அனுமதி இல்லாமல் பெறப்பட்ட கைரேகை. இது போலியானது என்று திமுக வேட்பாளர் சரவணன் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். இதற்கு இடையில் உடல் நலக்குறைவால் ஏ.கே.போஸ் காலமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு இத்தனை நாட்களாக விசாரிக்கப்பட்டது. அதே சமயம் வழக்கு காரணமாக இங்கு இடைத்தேர்தலும் நடக்காமல் இருந்தது.
தேர்தல்
சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து இந்த வழக்கு தீர்ப்பிற்காக நிலுவையில் இருந்தது. கடந்த விசாரணையின் போதே, நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அறிவிக்காமல் இருப்பது தவறு என்று சென்னை ஹைகோர்ட் தேர்தல் ஆணையத்தை கடிந்து இருந்தது. மேலும் இந்த வாரமே தீர்ப்பு வழங்கப்பட்டு என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
தவறு
இந்த நிலையில் இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் பெற்றி வெற்றி செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும் தன்னை வெற்றிபெற்றவராக அறிவிக்க வேண்டும் என்ற சரவணன் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஏன் முடியாது
நீதிபதி தீர்ப்பின்போது கூறுகையில், ஜெயலலிதா சுயநினைவில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டது. அப்படி இருக்கும்போது எப்படி அவர் கைரேகை வைத்திருக்க முடியும். இதுதொடர்பாக டாக்டர் பாலாஜி அளித்த சான்று செல்லாது. ஜெயலலிதாவை யாருமே பார்க்க முடியாதபோது, டாக்டர் பாலாஜி மட்டும் கைரேகை வைக்கும்போது எப்படி பார்க்க முடிந்தது என்று சுளீர் கேள்வி கேட்டார்.
தேர்தல் நடக்குமா
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதால், சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்த இருந்த தடை நீங்கி உள்ளது. ஆனால் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுடன் இதற்கும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.